சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்
சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை: சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவை தோற்றுவித்தவருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு தமிழக அரசால் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அதிமுக அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குதல், பொதுக்கூட்டங்களை நடத்துதல் போன்ற நிகழ்வுகளின் மூலம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவாக சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு சுமார் 66 அடி அகலமும், 55 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த வளைவு அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைபாடுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications