கட்சி, ஆட்சியை விட்டு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்.. அதிமுக (அம்மா) திடீர் அறிவிப்பு!
அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக தொண்டர்களின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா டிடிவி தினகரன் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார், கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம் என்று கூறினார். மேலும், தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது.
எனவே தினகரன் மற்றும் சசிகலா சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.