விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை நீக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஜெயக்குமார் அதிரடி
விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரனை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குட்கா விவகாரத்தில் சிக்கிய டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனரான ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
11 மணி நேரம் ரெய்டு
இதையடுத்து இவர்களுடைய வீடு உள்ளிட்ட 40 இடங்களில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் மட்டும் 11 மணி நேரம் ரெய்டு நடந்து முடிந்துள்ளது.
கோரிக்கை வலுக்கிறது
தமிழக அரசியலில் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. பெரும்பாலான கட்சி தலைவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது இவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீதிமன்றம்தான் சொல்லும்
இதனிடையே, சிபிஐ சோதனை குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு, "இந்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.
அனைவரும் நிரபராதிதான்
நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரை அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி தீர்ப்பு வரும் வரை சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.