காவேரி ஆற்றுகரையோர மக்கள் உஷார்.. செல்ஃபி எடுக்க வேண்டாம்.. அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: காவிரி, பவானி, தாமிரபரணி ஆறுகளில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்று கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வருவாய் துறை ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கைவிடுத்தார்.
சென்னை, எழிலகத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்த உதயகுமார் கூறியதாவது:
காவிரி,பவானி, தாமிரபரணி ஆறுகளில்அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. பாலங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆற்றோரங்களில் செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். தடை செய்யப்பட்ட ஆற்றுபகுதிகளில் நீச்சலடிக்கக்கூடாது. வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 9 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்து மாயனூருக்கு 2 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு உள்ளது. எனவே, காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பவானிசாகர் அணை 11 ஆண்டுகளுக்கு பிறகு 102 அடியை எட்டியுள்ளதால், பவானி ஆற்றில் வினாடிக்கு 40,000 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது.
இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் ஏற்பட்ட, கடும் வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதி வீடுகளுக்குள் நீர் புகுந்தது. கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை-அருமனை சாலையில் வெள்ளத்தால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தாமிரபரணி தண்ணீரால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.