வென்றதா 'நமக்கு நாமே' வியூகம்? புதிய வாக்காளர்களை ஈர்த்தாரா மு.க.ஸ்டாலின்?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் எத்தனையோ பயணங்கள் நடத்தப்பட்டிருந்த போதும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணம் பெரும் விவாதப் பொருளாக மையம் கொண்டிருக்கிறது. இந்த நமக்கு நாமே பயணம் எதை சாதித்திருக்கிறது? தி.மு.கவுக்கு புதிய வாக்கு வங்கியை சிறிதேனும் உருவாக்கியுள்ளதா? என்பதுதான் அரசியல் களத்தின் ஹாட் டாபிக்.
தி.மு.கவின் வரலாற்றில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில்தான் தேர்தல் எதிர்கொள்ளப்பட்டன... அவரது பிரசார பயணங்களே தேர்தல் களத்தில் தொண்டர்களுக்கு டானிக்காக இருந்தது... காலம் மாறிவிட்டது.. கருணாநிதியும் முதுமையடைந்துவிட இப்போது தி.மு.க. என்கிற தேரை தேர்தல் களத்துக்கு ஓட்டிச் செல்கிற சாரதியாக களமிறக்கப்பட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்...
பேசியே கட்சியை வளர்ப்பதும் வாக்குகளை வளைப்பதும் என்பது 20ம் நூற்றாண்டு கதை.. இந்த 21ம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்களில் "களமாடி" இளைஞர்களையும் இழுத்து அதுவும் குறிப்பாக புதிய வாக்காளர்களை அள்ளிப் போட்டு கரைசேர வேண்டிய கால கட்டாயத்தில் கட்சிகள் இருக்கின்றன... இந்த நெருக்கடிதான் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை நமக்கு நாமே பதாகையுடன் பயணிக்க வைத்திருக்கிறது.
பயண நோக்கம்...
ஸ்டாலின் பயணத்தின் நோக்கம் சகல தரப்பு மக்களையும் சந்திப்பது; நான் ஒன்றும் இளவரசர் அல்ல.. தனி ஒருவன் அல்ல.. மக்களோடு மக்களாக பயணிப்பவன் என்ற இமேஜை நிலைநிறுத்துவது; புதிய வாக்காளர்களை தி.மு.கவின் வாக்கு வங்கியாக மாற்றுவது என்றெல்லாம் கூறப்பட்டது..
முதல் வெற்றி இது...
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணத்தின் முதல் வெற்றி 'திட்டமிடப்பட்ட'படி அனைத்து இடங்களிலும் தொய்வின்றி ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பது.. கல்லூரி கலையரங்கங்கள் தொடங்கி கரும்புத் தோட்டம் வரை போடப்பட்ட ப்ளான் பக்காவாக செயல்படுத்தப்பட்டு வருவது... பல்வேறு தரப்பு மக்களை ஸ்டாலின் நெருங்கிச் சென்று சந்தித்திருப்பது என்பது போன்றவற்றை சொல்லலாம்..
மதிப்பெண் கிடைக்குமா?
அதேபோல் மக்கள் எதிர்கொண்டு இருக்கும் பிரச்சனைகள்தான் என்ன? அதை செவிமடுத்து ஸ்டாலின் கேட்டிருப்பது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.. ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது 4 லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கை மனுக்கள்... இந்த மனுக்கள் அனைத்துக்கும் ஸ்டாலினும் தி.மு.கவும் மதிப்பளித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்குமா? என்பதுதான் நமக்கு நாமே பயணத்துக்கு மக்கள் போடப்போகிற முதல் மதிப்பெண்ணாக இருக்கும்.
இளைஞர்கள், புதிய வாக்காளர்கள்...
இந்த பயணமே இளம் அல்லது புதிய வாக்காளர்களை கவருவதற்குத்தான் என்று சொல்லப்படுவதற்கேற்ப ஸ்டாலினும் இளைஞர்களுடன் மாணவர்களுடனும் கலந்துரையாடுகிறார்... அவர்களில் பலர் ஸ்டாலினையே அசத்தும் வகையில் தி.மு.கவின் பிரச்சார பீரங்கிகளாக பின்னி பெடலெடுக்கிறார்கள்.. எல்லாமே நிஜம்..
ஆனால் இந்த இளைஞர்கள், மாணவர்கள் சந்திப்பு என்பது பத்தோடு பதினொன்றாக இருக்கிறது.. தனிப்பட்ட முறையில் இளைஞர்களுக்கு அல்லது புதிய வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிற வகையில், அவர்களை உறுதியான தி.மு.கவின் வாக்கு வங்கியாக மாற்றுகிற பேச்சுகள், உறுதிமொழிகள், செயல்திட்டங்கள் எதுவுமே இல்லையே என்கிற ஆதங்கமும் வெளிப்படவே செய்கிறது.
சாதித்திருக்கிறார்?
ஸ்டாலினின் இந்த பயணம் ஒரு அரசியல் பயணமே தவிர.. இளைய சமூகத்தில் புதிய வாக்காளர்களிடத்தில் நம்பிக்கையை விதைக்கிற வகையிலான என்ன மாதிரியான அறிவிப்புகளை உறுதிமொழியை அளித்துவிட்டார்? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும் சுமார் 15-25% வரையில் புதிய அல்லது இளம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் 20% சதத்தை ஸ்டாலினின் பயணம் கவர்ந்திருக்கிறது என்று அடித்துச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்....
கரை வேட்டிகளை தவிர்த்து...
அதே போல இந்தப் பயணத்தில் திமுக கரை வேட்டிகளை, குறிப்பாக நிர்வாகிகளை, கும்பலாக சந்திப்பதை ஸ்டாலின் திட்டம்போட்டு தவிர்த்து வருகிறார். கடந்த திமுக ஆட்சிக்கு முன் சோத்துக்கு அலைந்த பலர் திமுக ஆட்சி காலத்தில் பெரும் பணக்காரர்கள் ஆகி டயோடா பார்சூனர்களில் பறந்தார்கள். ரெளடித்தனத்தை முன் நின்று நடத்தினார்கள். கட்டப் பஞ்சாயத்து, படாடோபம் என குறுநில மன்னர்களாக விளங்கி திமுகவுக்கு சாவு மணி அடித்தனர். இவர்களை பொது இடத்தில் வைத்து ஸ்டாலின் சந்திக்காமல் இருப்பதே நல்லது. மேலும் கடந்த ஆட்சியில் தவறு செய்தோம், நானும் கண்டு கொள்ளாமல் இருந்தது தப்பு. இனி அந்தத் தவறு நடக்காது என வெளிப்படையாக ஸ்டாலின் பேசுவது மக்களை நிச்சயம் கவர்ந்துள்ளது. ஒரு வேளை வென்றால், சொன்ன மாதிரி நடந்து காட்டுவாரா ஸ்டாலின்?