மொட்டை மாடி டூ மோடிக்கு பிரமாண்ட கறுப்பு பலூன்.. திமுக போராட்டம் #GoBackModi
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கிண்டியில் பிரம்மாண்ட கறுப்பு பலூனை காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Recommended Video
சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பிரம்மாண்டமான கறுப்பு பலூனை பறக்கவிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் பறக்க விட்ட பலூனை உடனடியாக அகற்றக்கோரி காவல்துறையினர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார்.
மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லோருடைய வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கறுப்பு உடையணிய வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.
பறக்கும் கறுப்புக்கொடி
இன்று காலையிலேயே திமுகவின் தலைமையகம் அமைந்திருக்கும் அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிலும், ஸ்டாலின் வீட்டிலும் இன்று கறுப்பு கொடி ஏற்றப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கையில் கறுப்புக் கொடியுடன் கருப்பு சட்டை அணிந்து மோடிக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மோடிக்கு எதிர்ப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவிடந்தை ராணுவ கண்காட்சி முகாம் நடைபெறும் வழித்தடத்திலும் பின்னர் அங்கிருந்து அடையார் புற்றுநோய் நிறுவன மையம் செல்லும் வழி நெடுகிலும் திமுகவினர் கறுப்புகொடியை கையில் வைத்திருந்தனர். பல அமைப்பினர் தமிழ் உணர்வாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி திரும்பி போ
தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி கோ பேக் என்ற வாசகம் அடங்கிய ராட்சத பலூனும், 2 ஆயிரம் கருப்பு பலூன்களும் வானத்தில் பறக்கவிட்டு மா. சுப்ரமணியம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பிரதமருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம் என்று மா.சுப்ரமணியம் கூறினார்.
பலூனுக்கு அனுமதியில்லை
காவிரி நீர் பிரச்சினை காவிரி டெல்டா மாவட்ட பிரச்சினை என்று கருதி விடக்கூடாது. ஒட்டுமொத்த தமிழர்களின் குடிநீர் பிரச்சினையாகவும் அது உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கினை கையாளும் மத்திய அரசுக்கு தமிழர்கள் ஒன்று சேர்ந்து பாடம் புகட்டும் நேரம் இது என்று கூறினார். இதனிடையே ராட்சத பலூன் பறக்கவிட அனுமதியில்லை என்று கூறி அதனை அகற்ற காவல்துறையினர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.