ரூ. 4 கோடியும் கரகம் ஆடி சம்பாதித்தேன்… எதிரிகள் பழிவாங்கிவிட்டனர்: மோகனாம்பாள்
வேலூர்: என் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட 4 கோடி ரூபாயும் கரகம் ஆடி சம்பாதித்த பணம்தான். வட்டிக்கு விட்டு அவற்றை பெருக்கினேன் என்று கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூர் கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் வீட்டில் ரூ.4 கோடி பயணம் 73 சவரன் நகை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். மோகனாம்பாள் தனது அக்காள் மகன் சரவணன் என்பவருடன் சேர்ந்து செம்மர கடத்தலில் ஈடுபட்டும், கந்து வட்டிக்கு பணம் கொடுத்தும் கோடி கோடியாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
வேலூர் நீதிமன்றத்தில் மோகனாம்பாள் சரணடைந்ததையொட்டி ரூ.4 கோடி பணம் வந்தது எப்படி? செம்மர கடத்தல் தொடர்பு? வீடுகளை அடமானம் வாங்கியது பற்றி விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். மோகனாம்பாளை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 48 மணிநேரம் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இதையடுத்து மோகனாம்பாளையும், அவரது அக்காளையும் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது கையெழுத்து மட்டுமே போடப்பட்டிருந்த சில வெற்றுதாள்கள், வீட்டு அடமான பத்திரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.
அதை தொடர்ந்து காட்பாடி அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் மோகனாம்பாளிடம் விசாரணையை நடத்தினார்கள். மூட்டு மாற்று ஆபரேசன் செய்து இருப்பதால் வலது காலில் பெரிய கட்டுடன் சக்கர நாற்காலியில் மோகனாம்பாள் அமர்ந்து இருந்தார்.
போலீசாரின் கேள்விகளுக்கெல்லாம் சாதாரணமாக பதில் அளித்தார்.

என்னுடைய பணம்தான்
என் வீட்டில் இருந்து நீங்க எடுத்த 4 கோடி பணம், நகையெல்லாம் என்னது தான். இல்லைன்னு யார் சொன்னது? அம்புட்டும் ஆடி சம்பாதிச்சதுங்க. கிடைத்த வருமானத்தை வட்டிக்கு விட்டு பணத்தை பெருக்கினேன்.

100 குழுக்கள் இருக்கு
ஒரு காலத்தில் மோகனா ஆட்டம்னா பல மைல் தூரத்தில் இருந்து பார்க்க வருவாக. இப்பவும் என்னிடம் 100 குழுக்கள் இருக்கு. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கரகாட்டம்னா என்னைத்தான் தொடர்பு கொள்வார்கள். ஏரியாவுக்கு தகுந்த மாதிரி குழுக்களை பிரித்து அனுப்புவேன். ஒரு குழுவுக்கு ரூ. ஒன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கிறேன்.

வட்டிக்கு விட்டு சம்பாதித்தேன்
கிடைச்ச பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்தேன். எழுத படிக்க தெரியாத நான் அவ்ளோ பணத்தை எங்க கொண்டு வைப்பேன். பேங்கில் போடணும், வரி கட்டணும் என்றெல்லாம் தெரியாதுங்க. அதனால்தான் வீட்டில் வச்சிருந்தேன். இப்ப வரி கட்ட சொன்னாகூட கட்டிடுறேன்.

செம்மரக்கடத்தல் பற்றி தெரியாது
அக்கா மகன் சரவணனை பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. செம்மர கடத்தல் விவகாரமெல்லாம் எனக்கு தெரியாது. தி.மு.க. பிரமுகர் பாபுவை பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.

விடிய விடிய கரகம் ஆடுவேன்
எனக்கு நல்லா ஆடத்தாங்க தெரியும். தலையில் கரகத்தை தூக்கி வைச்சிட்டேன்னா ஆடி முடிக்கும் வரை தொடவும் மாட்டேன். இறக்கி வைக்கவும் மாட்டேன். நான் ஆடுவதை விடிய விடிய கூட கண்கொட்டாம உட்கார்ந்து பார்ப்பாங்க. இன்னைக்கும் என்னிடம் இருக்கும் கரகாட்ட குழுவினர் பல ஊர்களுக்கும் சென்று நல்லாத்தான் ஆடுறாங்க.

பழிவாங்கி விட்டனர்
என் வளர்ச்சியை பிடிக்காதவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் ஆடாவிட்டாலும் மற்ற கலைஞர்களை வைத்து இவ்வளவு சம்பாதிக்கிறாளே என்று என் மீது அவர்களுக்கு பொறாமை. என்னை மாட்டி விட சந்தர்ப்பம் பார்த்து காத்து இருந்தனர். திட்டம் போட்டு என்னை பழிவாங்கி விட்டார்கள்.

சத்தியத்துக்கு கட்டுப்பட்டவள்
என் மீது எந்த தவறும் இல்லைங்க. நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஆடுறவ. தப்பெல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினார். தன் தரப்பு நியாயத்தை சாமார்த்தியமாக எடுத்து வைத்த மோகனாம்பாளிடம் செம்மர கடத்தல் கரகாட்டம் எப்படி? என்பதை குறுக்கு கேள்விகளை கேட்டு போலீசார் உண்மையை வரவழைத்தனர்.

சரவணன், நிர்மலா
சரவணன், நிர்மலா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்த போது கிடைத்த தகவல்களையும் வைத்து மோகனாம்பாளை மடக்கினார்கள். செம்மர கடத்தல் தொடர்பு, கந்துவட்டி பற்றி துருவி துருவி கேட்டனர்.

பிரியாணி வாங்கிக் கொடுங்க
போலீஸ் நிலையத்தில் போலீசார் வாங்கி கொடுத்த சாப்பாடு சரியில்லை என்று ஒரு பிரபல ஓட்டலை சொல்லி அங்கிருந்து சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரது விருப்பப்படி அந்த ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்
விசாரணை முடிந்து நேற்று மாலையில் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மோகனாம்பாள் வீட்டில் இருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் மற்றும் நேற்று கைப்பற்றப்பட்ட 21 பிராமிசரி நோட்டுகள், அடமான பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுஜாதா உத்தரவிட்டார்.

போலீசாரின் கவனிப்பு
அதைத்-தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த மோகனாம்பாள் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, ‘எனக்கு உடல்நிலை நன்றாக உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லை. விசாரணையின் போது போலீசார் என்னை துன்புறுத்தவில்லை. நன்றாக கவனித்துக் கொண்டனர்' என்றார். பின்னர் பலத்த காவலுடன் இருவரும் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

பணத்தை பாதுகாத்த மோகனா
கடந்த 2 ஆண்டுகளாக நிர்மலாவின் மகன் சரவணன் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். மிக குறுகிய காலத்தில் சரவணனுக்கு கோடிக் கணக்கில் பணம் கொட்டியது.
சித்தி மோகனாம்மாளிடம் மொத்த பணத்தையும் கொடுத்துள்ளார். மோகனாம்பாள் ஏற்கனவே வட்டி தொழில் செய்து வந்ததால் சரவணன் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளார் என்று மோகனாவை விசாரித்த போலீசார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு
காட்பாடியில் ஜமுனாவின் வீட்டை வாடகைக்கு எடுத்து மொத்த பணத்தையும் பாதுகாத்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் செம்மர கடத்தல் தொழிலுக்காக சரவணனிடம் ஏராளமான பணத்தை முன் பணமாக வழங்கியுள்ளனர். அவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications