ஆர்.கே.நகரில் ஆம்புலன்ஸ் மூலம் பணப்பட்டுவாடா.. வீரமணி குற்றச்சாட்டு
ஆர்.கே.நகரில் ஆம்புலன்ஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
நாகர்கோவில்: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்று வாக்காளர்களுக்கு சப்ளை செய்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே பணப்பட்டுவாட நடைபெறுவதாக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஆம்புலன் வேன்களில் பணத்தை கொண்டு சென்று வாக்காளர்களுக்கு சப்ளை செய்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரமணி மேலும் கூறுகையில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் கமிஷன் இருக்கிறதா? என்று தெரியாத அளவுக்கு அங்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
ஏற்கெனவே, பணத்தால் வெற்றி பெறலாம் என்கிற சூத்திரத்தை ஆளுங்கட்சியினர் உருவாக்கியிருக்கிறார்கள். ஆம்புலன்சில் நோயாளிகளைதான் ஏற்றிச் செல்வார்கள். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்று வாக்காளர்களுக்கு சப்ளை செய்கிறார்கள்.
ஆகையால், இந்த இடைத்தேர்தலிலாவது தேர்தல் ஆணையம் கொஞ்சம் விழிப்பாக இருந்து, காவல்துறையும், மற்றவர்களும் தங்களுடைய சட்டம் ஒழுங்கு முறையைக் காப்பாற்றுவதோடு, பணப் பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் கட்டுப்படுத்த வேண்டும். ஆனாலும் பணபட்டு வாடாவையும் மீறி ஆர்.கே,.நகர் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்து உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications