ஜெயலலிதா நலம் பெற பால்குடம்.... ஆயுள் ஹோமம்.... தொடரும் பிரார்த்தனைகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வேண்டி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் எம்.எல்.ஏ டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பால் குடம் எடுத்து வந்து நரசிங்கபெருமாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்தனர்.
தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர்.

சிறப்பு பிரார்த்தனை
சென்னை தியாகராய நகர் தேவி மாரியம்மன் கோயிலில், தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், முதல்வர் பூரண நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி-சேலைகளும் வழங்கப்பட்டன.

தோஷ நிவாரண ஹோமம்
தென்சென்னை தெற்கு மாவட்டம், மயிலை பகுதிக் கழகம் சார்பில், மாதவபெருமாள் ஆலயத்தில் அபமிருத்ஞ்ய தோஷ நிவாரண ஹோமம் நடைபெற்றது. பின்னர் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், அமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

பால்குடம்
காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள அருள்மிகு அனந்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் இருந்து, பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் 108 பால்குடம் சுமந்து, 7 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரையாக வந்து, மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் பெண்கள் உள்பட 508 பேர் பால்குடம் ஏந்தி முத்துமாரியம்மனுக்கு அபிசேகம் செய்து வழிபட்டனர்.

மிருத்யுஞ்சய யாகம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மஹா மிருத்யுஞ்சய ஆயுஷ் யாகம் நடத்தப்பட்டது. கோவை புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் 24 வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆயுள்யாகம், மிருத்யுஞ்சய யாகம் மற்றும் ருத்ரயாகம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பட்டீஸ்வரருக்கு மலர் அலங்கார பூஜை நடைபெற்றது.

வேடசந்தூர் எம்.எல்.ஏ
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வந்து நரசிங்கபெருமாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ டாக்டர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பழனி முருகனுக்கு அபிசேகம்
பழநி மலைக் கோயிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், ஏராளமான அதிமுகவினர் பால்குடம் சுமந்துசென்று மூலவருக்கு பாலாபிசேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மசூதிகள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications