தாம்பரம் அக்காள் – தம்பி கொலையில் காதலன் கைது… ஃபேஸ்புக் காதல் கொலையில் முடிந்தது
சென்னை: சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை அவரது தம்பியுடன் கொடூரமாக கொலை செய்த வழக்கில் மாணவியின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம், தேனுகாம்பாள் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவர், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள இரு சக்கர மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இந்து பாலா. இவர், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகள் சதுர்ஷினி(வயது 19), பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் யுஜேஷ்குமார்(11), சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த இந்து பாலா, வீட்டின் ஹாலில் மகன் யுஜேஷ்குமாரும், படுக்கை அறையில் மகள் சதுர்ஷினியும் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சதுர்ஷினியின் தலை முடி அறுக்கப்பட்டும், வெற்றி, தலையில் வெட்டுக்காயமும் இருந்தது.
சேலையூர் போலீசார் கொலையான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் சதுர்ஷினியையும், அவரது தம்பியையும் அவரது காதலன் முகேஷ்(24) கொலை செய்தது தெரியவந்தது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் தன்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அஸ்லம்பாஷா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் முகேசை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று சந்தோஷபுரம் செக் போஸ்டில் தனிப்படை போலீசார் முகேசை கைது செய்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
படிக்கும் போது காதல்
மேடவாக்கம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த முகேஷ், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் எம்.எஸ்.சி. கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய தந்தை உன்னிகிருஷ்ணன், கடை நடத்தி வருகிறார். தம்பி ஹரிஷ், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
முகேஷின் தம்பி ஹரிஷ், கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும்போது சதுர்ஷினி அவருடன் படித்து வந்தார். தம்பியை பள்ளியில் விட வரும் முகேஷ், சதுர்ஷினியுடன் நெருங்கி பழகி உள்ளார். பேஸ்புக்கில் இருவரும் அடிக்கடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
திருமணத்தில் முடிந்தது
பிளஸ்-2 படித்து முடித்ததும் சதுர்ஷினி, பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் சேர்ந்தார். அதே கல்லூரியில் முகேஷ், எம்.எஸ்.சி. கேட்டரிங் மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். தீவிரமாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி சதுர்ஷினி வீட்டை விட்டு வெளியேறி முகேசை ராயபுரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சேலையூர் போலீசில் சதுர்ஷினியின் பெற்றோர் புகார் செய்தனர். திருமணம் முடித்து போலீஸ் நிலையம் வந்த சதுர்ஷினி, காதல் கணவருடன் செல்வதாக கூறினார். சதுர்ஷினி ‘மேஜராக' இருந்ததால் அவரின் முடிவின்படி காதல் கணவருடன் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
புறக்கணித்த மனைவி
இந்த நிலையில் காதலனுடன் சென்ற சதுர்ஷினியின் மனதைக் கரைத்த பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டனர். அதன் பின்னர் முகேசை சந்திக்க சதுர்ஷினி மறுத்து விட்டார். தாய் வீட்டில் இருந்தே கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் சதுர்ஷினியை சந்தித்து பேச முகேஷ் சென்றபோதும், அவரிடம் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சதுர்ஷினி, முகேசை சட்டப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த முகேஷ், சதுர்ஷினியை கொலை செய்ய திட்டமிட்டாராம்.
அறுத்துக் கொலை
இதற்காக கேட்டரிங் பணியின் போது இறைச்சி அறுக்க பயன்படுத்தப்படும் பெரிய கத்தியையும், சுத்தி ஒன்றையும் எடுத்துக்கொண்டு வியாழக்கிழமையன்று மாலை சதுர்ஷினி வீட்டுக்கு முகேஷ் சென்றார். அங்கு அவரும், தம்பியும் மட்டும் தனியாக இருந்தனர்.
பின்னர் முகேஷ், படுக்கை அறையில் இருந்த சதுர்ஷினியை சராமாரியாக கத்தியால் அறுத்தார். கழுத்து, தலை, நெற்றி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே சதுர்ஷினி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது தம்பி யுஜேஸ்குமார், முகேசை தடுக்க முயன்றார். அப்போது அவனது தலையில் சுத்தியலால் அடித்தும், கத்தியால் அறுத்தும் கொலை செய்த முகேஷ், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாராம்.
முகேசிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்தன.
மேலும், ‘‘காதலித்து திருமணம் செய்து விட்டு, பெற்றோர் பேச்சை கேட்டு என்னை புறக்கணித்ததால் ஆத்திரத்தில் சதுர்ஷினியை கொலை செய்ததாக'' போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முகேஷ் கூறி உள்ளார்.