மைசூரு, குலசை நகரங்களில் கோலாகலமாக தொடங்கியது தசரா! 10ம் தேதி சூரசம்ஹாரம் #Navratri
சென்னை: உலக புகழ்பெற்றது மைசூரு தசரா ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி முன்னிட்டு நடக்கும். 10 நாட்கள் நடக்கும் இந்த தசரா விழா இன்று காலை 11.40 மணிக்கு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜையுடன் கோலாகமாக தொடங்கியது.
தசராவை பிரபல எழுத்தாளரும், நாடோஜா விருது பெற்றவருமான சென்னவீர கனவி தொடங்கி வைத்தார். முதல்வர் சித்தராமையா சிறப்புரையாற்றினார்.
காவிரி பிரச்சினை, போராட்டங்களுக்கு நடுவே, தசரா விழா தொடங்கி உள்ளதால் பழைய பொலிவுடன் தசரா நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனாலும் வழக்கம் போல இந்த ஆண்டும் தசரா விழாவை காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவித்து வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
இதேபோல தமிழகத்தின் மைசூரு என புகழப்படும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
ராக்கெட் ஏவுவதற்கு, பிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான நிலப்பகுதி குலசேகரன்பட்டினம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது இந்த நகரத்துக்கு கிடைத்துள்ள கூடுதல் சிறப்பு. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் கோரிக்கை நிறைவேறினால், இந்த நகரம் மிகுந்த வளர்ச்சியடையும். அப்போது மைசூருக்கு ஈடாக தசரா விழா உலக பிரசித்து பெற வாய்ப்பும் கிடைக்கும்.
தசராவை முன்னிட்டு இன்று அக்டோபர் 1ம் தேதி, அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடந்தது. காலை 8 மணிக்கு கோயிலில் தசரா கொடியேற்றம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவங்குவர். இதையொட்டி காலை 6 மணி, மதியம் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.
இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அபிஷேக, அலங்கார தீபாராதனையும் மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு பரதநாட்டியமும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் திடலுக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தபடி கோயிலுக்கு வருகை தருவது சிறப்பு.