காவிரியில் கலக்கும் கழிவு நீர்.... கர்நாடகாவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்!!
சென்னை: காவிரி ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீர் குறித்து விளக்கமளிக்குமாறு கர்நாடக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் கர்நாடக மேலவையில் பேசிய அந்த மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில், தினமும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக மொத்தம் 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இதில் 148 கோடி லிட்டர் கழிவு நீராக, ஆறுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக பல்வேறு வகைகளிலும் தமிழகத்திற்குள் செல்கிறது; 88.9 கோடி லிட்டர் கழிவு நீர் பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகளின் வழியாகவும், 59.3 கோடி லிட்டர் கழிவு நீர் அர்காவதி மற்றும் காவிரி ஆறுகளிலும் கலந்து தமிழகத்திற்குச் செல்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
கர்நாடக அமைச்சர் ஒருவரே காவிரியில் கழிவு நீர் கலக்கப்பப்படுவதை உறுதி செய்ததையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கர்நாடகாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கர்நாடகம், பூகோள ரீதியாக மேடான பகுதி என்பதால், அங்கிருந்து கழிவு நீர் நேரடியாக, தமிழகத்தில் காவிரியில் கலக்கும் சூழல் உள்ளது. நதியாக இருந்த காவிரி வடிகால்வாயாக மாற, கர்நாடகமே காரணம் என்றும் கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் காவிரியில் கலக்கும் கழிவு நீரை தடுத்து நிறுத்தக் கோரி கர்நாடகாவுக்கு எதிராக பொதுநல மனுவை சுதன் என்பவர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து வரும் ஜூலை 280-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.