குடும்ப நிகழ்ச்சிபோல மாறிப்போன நெடுவாசல் போராட்ட களம்.. வருவோருக்கெல்லாம் உணவு, உபசரிப்பு ஜோர்
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட போராட்டத்துக்கு போலீஸாரின் தடையை மீறியும் குவியும் மக்களை அன்போடு உபசரித்து உணவு வழங்குவதால் இது போராட்டமா இல்லை குடும்ப விழாவா என்று குழம்பும் நில
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
விவசாயத்தையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் காத்துக் கொள்ள இறுதி வரை போராடுவதாக தெரிவிக்கின்றனர். இந்த மக்களுக்கு மாணவர்கள், தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர், வணிகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
6 இடங்களில் ஆழ்துளைக் கிணறு
பூமிக்கடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட 6 கிராமங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. எனினும மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான கிணறுகள் என்பதை கிராம மக்கள் அறியவில்லை.
மத்திய அரசு அனுமதி
தற்போது கடந்த 15 நாள்களுக்கு முன்பு நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது பொங்கி எழுந்த மக்கள் முக்கனிகள் விளையும் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி கடந்த 14 நாள்களாக போராடி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் போராட்டம்
இந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளித்து மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். புதுக்கோட்டை மக்களுக்கு அண்டைய மாநிலங்களில் இருந்து மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினை போல் இதையும் தமிழர்களின் பிரச்சினையாக பாவித்து போராட்ட களத்துக்கு சாரை சாரையாக மக்கள் கூட்டம் வந்தவண்ணம் உள்ளனர்.
உணவுடன், அன்பான உபசரிப்பு
விவசாயத்தைக் காக்க முழு வீச்சில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள நெடுவாசல் நோக்கி வரும் மக்களை அன்புடன் உபசரித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு சுடசுட உணவு தயாரிக்கும் பணியை கிராமத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கிராம மக்களின் அன்பை பார்க்கும் போது இது போராட்டமா? அல்லது குடும்ப விழாவா? என்று குழம்பும் நிலை ஏற்படுகிறது.
கோட்டைக்காடிலும்...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மற்ற இடங்களைக் காட்டிலும் தங்கள் பகுதி பெரிதும் நிலை ஏற்படும் என்ற அச்சம் கொண்ட கோட்டைக்காடு கிராமத்தினர் தற்போது 4-ஆவது நாளாக போராடி வருகின்றனர். போராட்ட களத்துக்கு சாரை சாரையாக வரும் மக்களையும் வாகனப் பேரணி நடத்தும் இளைஞர்களையும் ஆங்காங்கே போலீஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
தடுப்பை மீறி...
மக்கள் கூடுவதை தடுக்க மாவட்டத்தின் 7 இடங்களில் போலீஸார் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர். போராட்டம் தொடங்கியபோதும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உளவுத் துறை அதிகாரிகளே தீவிர கண்காணிப்பில் பணி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மாநில உளவுத் துறையும் போராட்டக் களத்தில் யார் யார் வருகின்றனர், வாகன பேரணியின் போது கலந்து கொள்ளும் வாகனங்கள் ஆகியவை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.
புற்றுநோய் பரவும் அபாயம்
போராட்டம் குறித்து சிலர் கூறுகையில், இந்த திட்டத்தால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் ஊனமுடன் பிறக்கின்றனர். மேலும் தமிழகத்தை போலியோவை ஒழித்து விட்டோம் என்று மார்த்தட்டிக் கொள்ளும் அரசு இப்பகுதியில் குழந்தைகள் ஊனமாக பிறப்பது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உயிரைக் குடிக்கும் இந்த திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.