மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் படாது: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
மதுரை: மக்கள் விரும்பாவிட்டால் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் மட்டுமல்லாது தங்களின் உடல்நலம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாணவர்களும், இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போராட்டக்குழு சந்தித்து கோரிக்கை விடுத்தது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக நெடுவாசலுக்கு சென்று பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்த திட்டத்துக்கு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை. அப்படிபட்ட நிலையில் தமிழக மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள். தவறான புரிதல் காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் படாது. மக்கள் விரும்பினால் டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.