”இனி தேர்வில் ஆள்மாறட்டம் செய்ய முடியாது- புதியதாக போட்டோவுடனான விடைத்தாள்”
சென்னை: +2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 53 ஆயிரத்து 321 மாணவ,மாணவிகள் எழுதினார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு நேற்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது.
இந்த வருடம் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோரை வணங்கிய மாணவர்கள்:
முதல் நாள் தேர்வு என்பதால் மாணவ,மாணவிகள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கடவுளை வணங்கிவிட்டு பெற்றோரையும் வணங்கிவிட்டு பள்ளிகளுக்கு தேர்வு எழுத சென்றனர்.
சிறப்பு வழிபாடு:
சில பள்ளிகளின் முன்பு உள்ள பிள்ளையார் கோவிலில் மாணவ,மாணவிகள் வழிபாடு செய்துவிட்டு தேர்வு எழுதச்சென்றனர். சில கிறிஸ்தவ பள்ளிகளில் மாதா சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவிகள் வணங்கினார்கள்.பள்ளிக்கு சென்றதும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. சில மாணவர்கள் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.
பென்சி,பேனா வைக்க பவுச் கூடாது:
தேர்வு அறைக்குள் பேனா பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.தேர்வு மையங்களில் பென்சில், பேனா வைக்கக்கூடிய பளிச் என்று தெரியக்கூடிய பவுச் அனுமதிக்கப்பட்டது. சில இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. சில தனியார் பள்ளிகளில் பள்ளியில் இருந்தே எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பவுச் வாங்கிக் கொடுத்து தேர்வு எழுத வைத்தனர்.
தேர்வு அறைக்குள் காலணி கூடாது:
தேர்வு அறைக்குள் காலணிகளையும் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. பெல்ட் அணிந்திருந்த மாணவர்களும் பெல்ட்டை கழற்றி தேர்வு அறைக்கு வெளியே வைத்துவிட்டு தேர்வு எழுதச்சென்றனர். துண்டு பேப்பர் வைத்து காப்பி அடித்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில்தான் இப்படி ஏற்பாடு செய்யப்பட்டதாக தேர்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்பு
தேர்வு மையங்களை 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த படையினர் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு செய்தனர்.புதியதாக விடைத்தாள் முகப்பிலும் தேர்வாளரின் புகைப்படம் இணைக்கப் பட்டுள்ளதால் ஆள்மாறாட்டம் செய்ய இயலாது.
பல லட்சம் பேர் எழுதினர்:
பிளஸ்-2 தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 6ஆயிரத்து 4 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். மேலும் தனித்தேர்வர்கள் 53 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள். மொத்தம் 2 ஆயிரத்து 242 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
பார்வையற்ற மாணவர்களும் எழுதினர்:
தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பார்வையற்ற மாணவர்கள் சொல்வதை எழுத தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அந்த ஆசிரியர் கேள்வியை வாசித்து பார்வையற்ற மாணவரிடம் கூறுவார். அதற்கு அவர் கொடுக்கும் பதிலை அந்த ஆசிரியர் எழுதுவார். இவர்களுக்கும், காது கேட்கும்திறன் குறைந்தவர்களுக்கும் வழக்கத்தைவிட கூடுதலாக ஒருமணிநேரம் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டது. தேர்வுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
”தேர்வு எளிதாக இருந்தது” மாணவர்கள்:
இந்த வருடம் விடைத்தாளில் முகப்பு சீட்டில் மாணவர்கள் பதிவு எண் அச்சடிக்கப்பட்டிருந்ததால் நாங்கள் முதல் பக்கத்தில் அதை சரிபார்த்துவிட்டு எங்கள் புகைப்படத்திற்கு கீழ் கையொப்பம் மட்டும்தான் இட்டோம். பின்னர் கேள்வித்தாளை படித்து பார்த்துவிட்டு விடை எழுதத்தொடங்கினோம்.
பொதுவான கேள்வித் தாள்:
தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் பொதுவான கேள்வித்தாள்தான். அதனால் தேர்வு மிக எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்துதான் அனைத்துகேள்விகளும் வந்திருந்தன. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எந்த ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை.