எடப்பாடி தலைமையில் 'மன்னார்குடி' அடிமை ஆட்சி அமைவது தமிழகத்துக்கு தேவைதானா?
மன்னார்குடி கோஷ்டியின் வழிகாட்டுதலில் எடப்பாடி தலைமையிலான ஒரு அடிமை ஆட்சி தமிழகத்துக்கு தேவை இல்லை என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம்.
சென்னை: சசிகலா முதல்வராக முடியாவிட்டாலும் தங்களது அடிமைகளின் ஆட்சிதான் அமைய இருக்கிறது என்பதை 'பறைசாற்றி' கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. ஆளுநரை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிச்சாமியுடன் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனும் சென்றதன் மூலம் மன்னார்குடி மாபியா கும்பலின் ஆட்சிதான் அடுத்து அமையும் என வெளிப்படுத்தி உள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த உடன் அதிமுகவை கைப்பற்றியது மன்னார்குடி கோஷ்டி. 25 நாட்கள் சகிக்க முடியாத நாடகங்களை அரங்கேற்றி அதிமுகவின் பொதுச்செயலராக 'நியமனம்' செய்ய வைக்கப்பட்டார் சசிகலா.
இதையடுத்து முதல்வர் பதவியையும் கபளீகரம் செய்ய படாதபாடு பட்டார் சசிகலா. இதற்காக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது மன்னார்குடி கோஷ்டி.
சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு
ஆனால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இதற்கெல்லாம் அசராத ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சசிகலாவின் இந்த முயற்சிக்கு ஒட்டுமொத்த தமிழகமும் எதிராக இருந்தது.
எம்.எல்.ஏக்களுக்கு நெருக்கடி
சசிகலாவை ஆதரிக்கக் கூடாது என ஒவ்வொரு அதிமுக எம்.எல்.ஏவையும் தொகுதி மக்கள் காய்ச்சி எடுத்துவிட்டனர். ஆனாலும் முதல்வர் பதவி மீதான பேராசையில் ஆளுநரை மிரட்ட தொடங்கினார் சசிகலா. வன்முறையை தூண்டும் வகையில் பொறுத்திருக்க முடியாது என்றெல்லாம் சீறினார்.
தவிடு பொடியான கனவு
மன்னார்குடி கும்பலின் இந்த ஆட்டங்களுக்கு முடிவு கட்டும் வகையில் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு அளித்து சிறை தண்டனையை உறுதி செய்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் பதவி கனவு தவிடுபொடியாக தகர்ந்தது.
எடப்பாடி பழனிச்சாமி
தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக எம்.எல்.ஏக்கள் மூலமாக முதல்வர் பதவிக்கு முன்னிறுத்துகிறது மன்னார்குடி கோஷ்டி. அடுத்து அமையப் போவதும் மன்னார்குடி கோஷ்டியின் ஆட்சிதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆளுநரை சந்திக்க போன குழுவில் தினகரன் இடம்பெற்றிருந்தார்.
வெட்கக்கேடு
இப்படி மன்னார்குடி கும்பலின் அடிமை ஆட்சி என்பது தமிழகத்துக்கு நிச்சயம் தேவை இல்லை என்பதுதான் பொதுமக்களின் கருத்து. இப்படி ஒரு அவமானகரமான ஆட்சி அமைவதை விட ஜனாதிபதி ஆட்சி எவ்வளவோ மேல் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம்.