அத்திப்பட்டியாகிறது சென்னை.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டது புழல் ஏரி! #Puzhal
சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி தற்போது முழுமையாக வறண்டு விட்டது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையின் முக்கிய நீராதாரமான புழல் ஏரி, தற்போது முழுவதுமாக வறண்டுவிட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுவாக சென்னையில் கோடையில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் கைகொடுக்கும்.
ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவட்டங்களிலிருந்து தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
10 நாள்களுக்கு ஒரு முறை
இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 10 நாள்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீரை தேடி மக்கள் அன்றாடம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரிகள் வறண்டன
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் ஏற்கெனவே வறண்டு விட்டது. இதனால் புழல் ஏரி ஓரளவுக்கு கை கொடுத்து வந்தது.
புழலும் வறண்டுவிட்டது
தற்போது புழல் ஏரி முழுமையாக வறண்டு விட்டது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் ஜீரோ மில்லியன் கனஅடியை தொட்டுவிட்டது. 2004 -ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது முழுமையாக புழல் ஏரி வறண்டுள்ளது.
20 கனஅடி நீர்
ஜீரோ மில்லியன் கனஅடிக்கு கீழ் தேங்கியுள்ள தண்ணீரை கொண்டு சென்னைக்கு 20 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு 2 மாதங்கள் உள்ளதால் அதுவரை சென்னையில் குடி பஞ்சத்தை எப்படி சமாளிப்பது என்று அதிகாரிகள் கையை பிசைந்து வருகின்றனர்.