இந்தியா வந்துள்ள ஒபாமாவின் ‘3 நாள்’ பிளான் இது தான்!
சென்னை: குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
இந்திய நேரப்படி, இன்று காலை 10 மணியளவில் டெல்லியின் பாலம் விமானப்படை தளத்தில் வந்திறங்கிய ஒபாமாவையும், அவரது மனைவியையும் பிரதமர் மோடிநேரில் சென்று வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, சர்தார் படேல் மார்கில் உள்ள மௌரியா ஷெரட்டன் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார் ஒபாமா. அங்கு அரை மணி நேரம் ஓய்வெடுக்கும் ஒபாமா, நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்கிறார்.
அங்கு அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு இந்திய முப்படையினரின் அணிவகுப்பை பார்வையிடும் ஒபாமா, பின்னர், பகல் 12.30 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்துகிறார். அங்கு அவரது வருகையின் நினைவாக மரக்கன்றையும் நடுகிறார்.
அங்கிருந்து இந்தியா கேட் அருகே உள்ள ஹைதராபாத் இல்லத்துக்குச் செல்கிறார் ஒபாமா. அங்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஒபாமாவும் இரு தரப்பு நல்லுறவுகள் குறித்து முக்கியப் பேச்சுவார்தையில் ஈடுபடுவர். இச்சந்திப்பின் நிறைவாக பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் பிற்பகல் 3 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.
இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதையடுத்து, அங்கு ஒபாவுக்கும் அவரது மனைவி மிச்செல்லுக்கும் பிரணாப் முகர்ஜி இரவு விருந்தளிக்கிறார்.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ராஜபாதையில் கொண்டாடப்படவுள்ள இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அதிபர் ஒபாமா பங்கேற்கிறார். இரண்டரை மணி நேரம் அங்கிருந்து குடியரசு தின நிகழ்ச்சிகளை அவர் கண்டு களிப்பார்.
பிற்பகல் 3.50 மணியளவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளிக்கும் வரவேற்பு நிகழ்வில் ஒபாமாவும் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, மாலை 5.30 மணியளவில் தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இந்திய-அமெரிக்க தொழிலக கூட்டமைப்பு நிகழ்வில் பங்கேற்று இரு நாட்டுத் தொழிலதிபர்கள், தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஒபாமா கலந்துரையாடுவார்.
இதேபோல, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி ஸ்ரீஃபோர்ட் அரங்கில் அமெரிக்க தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் ஒபாமா பங்கேற்கிறார்.
இதையடுத்து, பகல் 1.50 மணிக்கு டெல்லியில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பாரக் ஒபாமா புறப்படுகிறார்.