முதல் நாளிலேயே 15,000 கிலோ துவரம் பருப்பு விற்பனை... செங்கல் கலக்கப்பட்டதாக புகார்
சென்னை: தமிழக அரசின் குறைந்த விலை துவரம் பருப்பு விற்பனை துவங்கிய முதல் நாளான நேற்று மட்டும் சுமார் 15 ஆயிரம் கிலோ விற்பனையாகி உள்ளது.
போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பதுக்கல்காரர்கள், பருப்பு வகைகளைப் பதுக்கி, தட்டுப்பாட்டை அதிகரித்து மேலும் விலையை உயர்த்தினர். தற்போது சந்தையில் சில்லறை விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ. 200ஐத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பருப்பு இறக்குமதி...
எனவே, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்தல், பருப்பு வகைகளைப் பதுக்குவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 'இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பில், 500 டன் ஒதுக்க வேண்டும்' என, தமிழக அரசு விடுத்த கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.
மானிய விலையில்...
அதனைத் தொடர்ந்து, குறைந்த விலையில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் 91 கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 110 விலையில் துவரம் பருப்பு விற்பனை நேற்று தொடங்கப்பட்டது.
சென்னையில்...
சென்னையில் மட்டும் 56 இடங்களில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகின்றன. டி.யூ.சி.எஸ்., வட சென்னை, சிந்தாமணி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் 36 கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் இந்தப் பருப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. 20 அமுதம் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடைகள் அனைத்தும் காலை 10 முதல் இரவு 8 வரை செயல்படும்.
ஒரேநாளில்...
முதல்நாளான நேற்று கூட்டுறவு அங்காடிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் ஆர்வமுடன் வாசலில் காத்திருக்கத் தொடங்கினர். சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மானிய விலையில் துவரம் பருப்பு வாங்க நேற்று கடைகளில் குவிந்தனர். முதல்நாளான நேற்று மட்டும், சராசரியாக 15 ஆயிரம் கிலோ பருப்பு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருப்புகளில் செங்கல் கலப்படம்?:
தமிழக அரசின் குறைந்த விலை துவரம் பருப்பு அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளாக விற்கப்படுகிறது. அரை கிலோ ரூ.55-ம், ஒரு கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இறக்குமதி பருப்பானது சென்னை துறைமுகம் வழியாக கொண்டுவரப்பட்டு, சென்னை, வண்ணாரப்பேட்டையில் 10 தனியார் அரவை ஆலைகளில் பருப்பாக மாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நந்தனம், திருவல்லிக்கேணியில் உள்ள கூட்டுறவு மற்றும் வாணிப கழக கிடங்குகளில், பாக்கெட்டில் அடைத்து, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், ஆலைகளுக்கு வந்துள்ள துவரை மூட்டையில் கல், செங்கல் என பல பொருட்கள் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது 100 கிலோ துவரையில், 72 கிலோ பருப்பு தான் கிடைப்பதாகவும், மீதி 28 கிலோவுக்கு கலப்பட பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதுக்கல்காரர்களுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அரசின் மானிய விலை பருப்புகளில் கலப்படம் செய்து பருப்புகளை பதுக்கும் நபர்களை அரசு கண்டுபிடிக்க வேண்டும்.