சூடான பிரசாரம்..விறு விறு விற்பனையில் 'சரக்கு'.. கலர் கலராய் குடிக்கும் தொண்டர்கள்!
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரம் படு சூடாகி வரும் நிலையில் குடிகாரர்களுக்கு பெரும் கொண்டாட்டமாகியுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் குடிக்க மது வாங்கிக் குவிப்பதால் டாஸ்மாக் விற்பனை படு வேகமாக இருக்கிறதாம்.
தேர்தல் முடியும் வரை சரக்கு விற்பனை படு வேகமாக இருக்கும் என்றும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
குடிகாரர்களே இல்லாத அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தைக் காண முடியாது என்று கூறும் அளவுக்கு குடிப்பழக்கம் படு மோசமாகியுள்ளதாம்.
எங்கு பார்த்தாலும் மது வாடை
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், தலைவர்களின் பிரசாரக் கூட்டங்கள், தொண்டர்களின் கூட்டம் என எங்கு பார்த்தாலும் மது வாடைதான் அதிகமாக இருக்கிறதாம். மது குடிக்காமல் பெரும்பாலானவர்கள் கூட்டங்களுக்கு வருவதே இல்லை என்கிறார்கள்.
பிரியாணி- மது - பணம்
பிரியாணி, மது, கூட்டத்திற்கு வருவதற்குப் பணம் ஆகிய இந்த மூன்றுதான் இன்று அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு வெற்றியை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளதாம்.
கேஸ் கேஸாக வாங்கிக் குடிக்கும் கட்சிகள்
தங்களது தொண்டர்களுக்கும், கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க அழைக்கப்படும் நபர்களுக்கும் குடிக்கக் கொடுப்பதற்காக கேஸ் கேஸாக மதுவை வாங்கிக் குவிக்கின்றனராம் பல அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்.
டாஸ்மாக் விற்பனை 45 சதவீதம் உயர்வு
தேர்தல் கால தேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 45 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாம். குறிப்பாக கூட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் பல மடங்கு அதிக அளவில் மது வகைகள் விற்பனையாகிறதாம்.
கோவில் நகரம் காஞ்சிபுரத்திலேயே
பிப்ரவரி 8ம் தேதியன்று மட்டும் 270 கடைகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 1.5 கோடி அளவுக்கு கூடுதலாக மது விற்பனையானதாம். அன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட வண்டலூரில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாஜக கூட்டம் நடந்தது.
திருச்சியை விட ஜாஸ்தி
இதே நரேந்திர மோடி டிசம்பர் 26ம் தேதி திருச்சியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது அன்று திருச்சி டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ. 46 லட்சத்துக்கு மது விற்பனையானது நினைவிருக்கலாம்.
ஜெ. வருகையால் ரூ. 17 லட்சம் கூடுதல் விற்பனை
இதேபோல முதல்வர் ஜெயலலிதா நாகப்பட்டனம் வந்து பேசிய நாளில் அந்த மாவட்டத்தில் உள்ள 142 கடைகளில் 17 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதல் மது விற்பனையானதாம்.
குவார்ட்டர், பிரியாணி, கூடவே காசும் கட்டாயம்
ஒரு கட்சி நிர்வாகி பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், இப்போது ஒவ்வொருவருக்கும் குவார்ட்டர் பாட்டில் மது, பிரியாணி பொட்டலம் மற்றும் கையில் காசு தர வேண்டியது கட்டாயமாகி விட்டது. இது கிடைத்தால்தான் கூட்டங்களுக்கு வருகிறார்கள். அது தீவிரத் தொண்டனாக இருந்தாலும் சரி, கூட்டங்களுக்காகவே போய் வருகிறவர்களாக இருந்தாலும் சரி, இது கட்டாயம் என்கிறார்.
பெண்கள் மதுவை விரும்புவதில்லை
அதேசமயம் பெண்களுக்கு பணம் மற்றும் சாப்பாடு தேவை. ஆனால் மதுவுக்கு ஆகும் பணத்தை சேர்த்து தங்களுக்குக் கொடுக்குமாறு பல பெண்கள் எங்களை கட்டாயப்படுத்துவார்கள் என்றார் அவர்.
தலைக்கு ரூ. 300 முதல் 500 வரை
சென்னையில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள் பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளின் கூட்டங்களுக்கும் போய் வருகிறார்களாம். அவர்களுக்கு தலை ரூ. 300 முதல் ரூ. 500 வரை செலவிட வேண்டியுள்ளதாம்.
அந்தக் காலம் மலையேறிப் போச்சு
காந்தி காலமெல்லாம் மலையேறிப் போச்சு.. அப்போது அவர்களாகவே வந்தார்கள்.. இப்போது காந்தி படம் போட்ட நோட்டையும், குவார்ட்டர் மது பாட்டிலையும் காட்டி கூப்பிடும் நிலை வந்து விட்டது...