பகீர் கிளப்பும் கொரோனா.. தமிழ்நாட்டில் இன்றும் ஒருவர் பலி! 96 வயது சென்னை முதியவருக்கு என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து இருப்பதாக தமிழ்நாடு சுகாதாத்துறை தெரிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 432 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்து உள்ளார்கள். ஏராளமான நோயாளிகள் காய்ச்சல், சளி பிரச்சனைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
படிப்படியாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு சுகாதாரத்துறையோ கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. முந்தைய ஆண்டுகளை போன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்றை விட இன்றும் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 400 ஐ தாண்டிய நிலையில், இன்று 432 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,093 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,489 ஆக அதிகரித்து இருக்கிறது. இன்று கொரோனாவால் குணமடைந்து 243 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த 96 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார். தனியார் மருத்துவமனையில் இணை நோய்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்து உள்ளார்.
24 மணி நேரத்தில் உறுதியான கொரோனா பாதிப்பில் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அதிகபட்சமாக சென்னையில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 40பேருக்கும், கோவையில் 46, கன்னியாகுமரியில் 27 பேருக்கும், ராணிப்பேட்டையில் 16 பேருக்கும், சேலத்தில் 17, திருச்சியில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.