எண்ணி 7வது நாளில் மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பி.எஸ்!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சரியாக ஒரு வார இடைவெளியில் மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். சரியாக 7வது நாளான இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மீண்டும் சென்றார் அவர்.
சரியாக 7 நாளில் அவர் இங்கு வந்ததற்கு ஏதாவது விசேஷ காரணமா என்று தெரியவில்லை. ஆனால் இன்று அவருடன் தீபாவும் இணைந்ததுதான் விசேஷமாகும்.
முதல்வர் ஓபிஎஸ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக தியானம் மேற்கொண்டார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அன்று முதல் ஏற்பட்ட பதற்றமே 7 நாட்களாக தமிழக அரசியலை புரட்டி போட்டு விட்டது. இன்றுதான் சசிகலா சட்டத்தால் வீழ்த்தப்பட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் முதல்வர் ஓபிஸ் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தனர்.
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் உட்படட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அங்கு திரண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஜெ.தீபாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.