வர்தா புயலில் வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கி கலக்கினாரே ஓபிஎஸ்!
வர்தா புயலின் போது அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் வேட்டியை மடித்துக் கொண்டு களமிறங்கினாரே... இப்போது பழைய பன்னீர் செல்வத்தை பார்க்க முடியலையே.
Recommended Video
சென்னை: கடந்த ஆண்டு சென்னையை வர்தா புயல் தாக்கியபோது அப்போதைய முதல்வரும் தற்போதைய துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் செய்த பணியை யாராலும் மறக்க முடியாது.
புயல் தாக்கும் முன்பும், புயல் தாக்கிய பின்னரும் அவரது உடனடி மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் சென்னையை உடனடியாக மீட்டெடுத்தது. ஆனால் தற்போதைய மழைக்காலத்தில் மக்கள் ஓ.பி.எஸ்ஸை நினைவு கூருகிறார்கள்.
ஓபிஎஸ் அன்று செய்த காரியங்களை மக்கள் நினைவு கூர்ந்து பேசிக் கொள்கிறார்கள்.
தாண்டவமாடிய வர்தா புயல்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வர்தா புயல் கரையை கடந்த போது அப்பொழுது மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.
ஓபிஎஸ் நடவடிக்கை
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. உடனடியாக களமிறங்கிய அப்போதய முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், புயல் மற்றும் மழையினால் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் 100 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் 50 தொற்று நோய் தடுப்பு குழுக்கள் அமைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார்.
ஓபிஎஸ் பணிகளுக்கு பாராட்டு
மின் விநியோக சீரமைப்பு பணியில் 4 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டனர். முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னையில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முதல்வர் என்ற பந்தா எதுமின்றி மீட்பு பணியில் ஈடுபட்டார்.
மக்கள் பாராட்டிய ஓபிஎஸ்
2015ஆம் ஆண்டு சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த போது அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களுடன் மக்களோடு மக்களாக சாலையில் இறங்கி நிவாரண பணிகளை செய்தார். அந்த பணியை மக்கள் பாராட்டினர்.
வெள்ளம் சூழ்ந்த சென்னை
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னையை மீண்டும் தாக்கியுள்ளது. புறநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் தங்களின் பணிகளை செய்து வருகின்றனர். எனினும் ஓ.பன்னீர் செல்வத்தை அதாவது முதல்வராக பன்னீர் செல்வம் செய்த பணிகளை நினைத்து பார்க்கின்றனர் மக்கள்.