என் மகனை நிரபராதின்னு சொல்லலையே... எப்ப விடுதலைன்னும் தெரியலியே!- ஒரு தாயின் பரிதவிப்பு
சென்னை: தூக்கு தண்டனை ரத்தாகி, ஆயுள் தண்டனையா குறைக்கப்பட்டாலும், என் மகன் நிரபராதின்னு தீர்ப்பு வரவில்லையே, என்று ஆதங்கப்பட்டுள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இன்று ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
மேலும் தமிழக அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை தமிழ் உணர்வாளர்கள் வரவேற்றுள்ளனர். தன் மகன் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமற்றது என்பதை கடந்த 20 ஆண்டு காலமாக பல்வேறு மேடைகளில், நீதிமன்றங்களில் உரக்கச் சொல்லி, அவரது விடுதலைக்காக போராடி வருபவர் அற்புதம் அம்மாள்.
வரலாற்றில் தன் மகனுக்கு நீதி வேண்டி, இப்படியொரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்த தாயைப் பார்ப்பது அரிது. அவருக்கும் இந்தத் தீர்ப்பு ஒருவித நிம்மதியை அளித்தாலும், அது முழுமையானதாக இல்லை.
காரணம், செய்யாத குற்றத்துக்கு தொடர்ந்து தண்டனை அனுபவிக்கிறானே தன் மகன் என்பதுதான்.
இந்தத் தீர்ப்பில் தன் மகன் குற்றமற்றவன் என்பதை நீதிபதிகள் குறிப்பிடவில்லையே என்று ஆதங்கப்பட்டார் அற்புதம் அம்மாள். பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரியே, தான் உண்மையான வாக்கு மூலத்தைப் பதிவு செய்யவில்லை. பொய்யான ஒன்றைத்தான் உருவாக்கிக் கொடுத்தேன் என்று கூறிய பிறகு, என் மகன் எப்படி குற்றவாளியாக இருக்க முடியும் என்று கேட்கும் அற்புதம் அம்மாளின் கேள்வியில் உள்ள நியாயத்தை நீதிபதிகள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?
"என் மகனுக்காக மட்டுமல்ல... தூக்கு தண்டனைக்கு எதிரான என் போராட்டத்திலிருந்து நான் ஓயப் போவதில்லை. என் மகன் நிரபராதி. அவன் எந்த தீவிரவாத வேலையையும் செய்தவனில்லை. ராஜீவ் கொலைக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைக்கு அனைவருக்குமே இது தெரியும். அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதே தவறானது. இதை நீதிமன்றத் தீர்ப்பில் எதிர்ப்பார்த்தேன். ஆனால் அப்படி எதையும் குறிப்பிடாதது ஏமாற்றமாக உள்ளது.
23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என் மகன்.. ஒரு நிரபராதி விடுதலையாகும் நாள் எப்போது... அந்த வார்த்தை இந்தத் தீர்ப்பில் இடம்பெறவே இல்லையே...," என்கிறார் தவிப்புடன் அந்தத் தாய்.