விடுதலை செய்யக்கோரி... தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநரிடம் கருணை மனு அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சுமார் 24 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபகாலமாக பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமது வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படாதது, உடல்நிலை சரியில்லாதது மற்றும் பெற்றோரின் உடல்நிலை சரியில்லாதது போன்றவற்றை காரணம் காட்டி பேரறிவாளன் தமிழக ஆளுநரிடம் விடுதலை கோரி கருணை மனு அளித்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161-வது பிரிவின் கீழ், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.