சிறையில் 30 போலீசார் என்னைத் தாக்கினர்... ஜாமீனில் வெளிவந்த பியூஷ் மனுஷ் கதறல்
சேலம்: சிறைக்குள் 30 காவலர்கள் இணைந்து கொண்டு மூங்கில் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கியதாக ஜாமீனில் வெளியே வந்துள்ள சமூக சேவகர் பியூஷ் மனுஷ் கண்ணீருடன் தெரிவித்தார்.
சேலத்தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர் பியூஷ் மனுஷ். சமீபத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பியூஷ் மனுஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறைக்குள் அவரை சந்தித்த மனுஷின் மனைவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், போலீசார் சிறைக்குள் வைத்து தனது கணவரை கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பியூஷ் மனுஷுக்கு ஆதரவாக மக்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். இந்நிலையில், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், பியூஷ் மனுஷுக்கு 3 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது.
சிறை ஃபார்மாலிட்டிசை முடித்துக்கொண்டு இன்று மாலைதான் பியூஷ் மனுஷ் வெளியே வர முடிந்தது. சிறைக்கு வெளியே நிருபர்களிடம் பியூஷ் மனுஷ் கூறியது: சேலம் சிறைக்குள் சிறை கண்காணிப்பாளர் என்னை தாக்கிக் கொண்டிருந்தபோது சிறைக் காவலர்கள் 30 பேர் இணைந்து கொண்டு மூங்கில் கம்புகளை கொண்டு என்னைத் தாக்கினர். சிறை அறையில் இருந்து வெளியேற போலீசார் என்னை அனுமதிக்கவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் மரங்களை நட்டி வருகிறேன். எனக்கு நிகழ்ந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது என்று தெரிவித்தார். மனுஷ் பியூஷை சந்திக்க அவரது பெற்றோர், மனைவி சிறைக்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் மனுஷை கட்டி பிடித்து அழுதனர். பேட்டியளித்தபோது, பியூஷ் மனுஷின் கண்களிலும் நீர் வடிந்தது.