மது பார்ட்டி... திருச்செங்கோடு அரசு பள்ளியில் மது அருந்திய 7 மாணவிகள் டிஸ்மிஸ்
திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வின் போது வகுப்பறையில் மது குடித்த 7 மாணவிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று பள்ளியில் நேரடி விசாரணை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் மூன்று வயது குழந்தைகள் முதல் 90 வயது தள்ளாடும் தாத்தாக்கள் வரை மது போதைக்கு அடிமையாகியுள்ளனர். பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் மது போதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு வருவது சர்வசாதரணமாகி வருகிறது.
மாணவர்கள் மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவிகளும் மதுபோதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை அவ்வப்போது வாட்ஸ்அப்பில் வலம் வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் உணர்த்துகின்றன. கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ப்ளஸ் டூ மாணவி ஒருவர் காதல் தோல்வியால் மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
வகுப்பறையில் குடி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற இருந்த பிளஸ் 1 தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வு கடந்த 21ம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு வந்த 7 மாணவிகள் தேர்வு துவங்கும் முன் தேர்வு வகுப்பறையில் மது குடித்துள்ளனர்.
போதையில் மயக்கம்
மது அருந்திய ஏழு பேரில் 3 பேருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் மயங்கிய நிலையில் காணப்பட்டனர். இதைப்பார்த்து தேர்வு நடத்த வந்த ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாணவிகள் டிஸ்மிஸ்
மது குடித்த மாணவிகளில் 4 பேரை பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி டிஸ்மிஸ் செய்து டிசி கொடுத்துள்ளார். மற்ற 3 மாணவிகளின் பெற்றோர்கள் டிசி வாங்க மறுத்துள்ளனர். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி அதிகாரி விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் பள்ளியின் தலைமை ஆசிரியையை அழைத்து பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், வகுப்பறையில் மாணவிகள் மது குடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் இன்று திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்த 6 மாணவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சிவகாமி பள்ளியில் இருந்து நீக்கினார். அவர்கள் தற்போது வேறு அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் அதிர்ச்சி
இதேபோல கடந்த ஆண்டு திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்து ரகளை செய்த பிளஸ் 2 மாணவர்கள் 6 பேரை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகநாதன் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றினார். அரசு பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் செய்த குற்றம்
மாணவிகள் பள்ளி வகுப்பறையில் மது அருந்திய செய்தி, திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றிய செய்தி வேகமாக பரவி வருகிறது. ஆண்களுக்கு சமமாக நாங்களும் மது பார்ட்டி வைப்போம் என்று கூறி மாணவிகளும் மது அருந்துகின்றனர். இதனால் படிப்பும், வாழ்க்கையும்தான் பாழகிறது. இதில் யாரை குற்றம் சொல்வது குடித்த மாணவிகளையா? தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு குடிக்க அழைக்கும் அரசையா?