சாதிக்குமா பாமகவின் 'சாதி' ஜனநாயகக் கூட்டணி?
சென்னை: லோக்சபா தேர்தலில் சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற புதிய அணியை களமிறக்கிவிட்டிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அந்த கட்சியின் எதிர்காலம் ஒளிமயமானதா? ஒளிமங்கியதா? என்பதைத் தீர்மானிக்கப் போவதும் இந்த கூட்டணிதான்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மாற்று அரசியல் முகமாக பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. தமிழக உரிமைகள், ஈழத் தமிழர் பிரச்சனை போன்றவற்றில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக திகழ்ந்தது. பின்னர் வன்னியர்- தலித் ஒற்றுமைக்காக திருமாவளவனோடு கரம் கோர்த்தார்.
அதேபோல் தமிழ் இயக்கங்களை ஒருங்கிணைத்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தையும் முன்னெடுத்ததில் முன்னணிப் பங்கு வகித்தது. இதனூடேதான் திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளுடன் மாறி மாறி தேர்தல் கூட்டணியும் வைத்துக் கொண்டது பாமக.
அரசியல் பேரம்..
லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல் எதுவானாலும் "ப்ளஸ் ஒரு ராஜ்யசபா" சீட் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருந்தது பாமக. ஆனாலும் பாமகவினால் வளர்ச்சி அடைய முடியவில்லை.
வியூகம் வகுத்த பாமக
பாமகவினால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட விஜயகாந்த் கட்சி கூட விஸ்வரூப வளர்ச்சி அடைந்தது. அப்போது பாமக வகுத்த வியூகம்தான் இப்போது சமூக ஜனநாயகக் கூட்டணியாக உருவெடுத்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுற்று பயணம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி கிடையவே கிடையாது என்று அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி. அத்துடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதிய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
சாதி சங்கங்களின் சங்கமம்
இப்படி ஊர்தோறும் நடத்தப்பட்ட சாதி சங்கங்களின் சங்கமமே இப்போது சமூக ஜனநாயகக் கூட்டணியாக மலர்ந்திருக்கிறது. இந்த சமூக ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றிய விவரம் ரகசியமாக இருக்கும். பின்னர் அறிவிப்போம் என்றும் கூறியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பிரதான அரசியல் கட்சிகள் இல்லை..
இந்த கூட்டணியில் 40 என்ன 50 கட்சிகள் கூட இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.. ஆனால் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் என்ற பிரதான அரசியல் கட்சிகள் நிச்சயமாக இதில் இணையப் போவது இல்லை.
ஆதிக்க சாதிகளின் கூட்டணி
சாதி சங்கங்களின் பெயர்களை மாற்றி "கட்சிகளாக" இந்த கூட்டணியில் இடம்பெறப் போகின்றன். இது ஊரறிந்த ரகசியம்தான். அதுவும் ஆதிக்க சாதியினரை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்குகிறார் டாக்டர் ராமதாஸ். தமிழகத்தில் சாதியக் கூட்டணி எந்தக் காலத்திலும் சாதித்தது இல்லை என்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியைவிட வேறு சாட்சி எதுவும் தேவையும் இல்லை.
கோட்டையில் ஓட்டை
வன்னியர்களின் பிரதிநிதியாக தம்மை அறிவித்துக் கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையில்தான் நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றிக் கொடியை முதலில் பறக்கவிட்டது.. நேற்று வரை ராமதாஸின் தளபதியாக வலம் வந்து இன்று பாட்டாளி சொந்தங்களை தம் பங்குக்கு பாதியாக பிரித்துக் கொண்டு போய்விட்டார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன். வேல்முருகன் போன்ற வன்னிய சொந்தங்களே சாதிவெறிக் கட்சியை புறக்கணியுங்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.
எவரும் நேச சக்தி இல்லை
பாட்டாளி மக்கள் கட்சிக்கு நேச சக்தியாக திகழ்ந்த சமூக இயக்கங்களும் இப்போது எதிரிகளாகிவிட்டன. அவ்வப்போது அரவணைத்துக் கொண்ட திராவிட, தேசிய அரசியல் கட்சிகள் பரம வைரிகளாகிவிட்டன. இதெல்லாம் டாக்டர் ராமதாஸுக்கு தெரியாமல் இருக்கப் போவது இல்லை.
பழைய பாதை..
புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற பெயரில் மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே திரும்பியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அந்த கட்சி மட்டுமல்ல தமிழ் சமூகத்தையே இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்துக்கு கொண்டு செல்லக் கூடிய ஒரு கூட்டணியாகவே பாமகவின் சமூக ஜனநாயகக் கூட்டணி அமைந்துள்ளது.
வாழ்வா?சாவா?
ஆனாலும் இந்த சமூக ஜனநாயகக் கூட்டணி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. இது வாழ்வா? சாவா என்று ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவைப் போலதான் இது அமைந்திருக்கிறது.
தமிழகத்தின் எதிர்காலம்
பாமகவின் சமூக ஜனநாயகக் கூட்டணி ஒருவேளை பலம்பெற்றால் அது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பெரும் கிலியாகவே அமையும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதற்காகவே முழுவீச்சோடு தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் பாமக. எதிர்கால தமிழகத்துக்கும் இந்த கூட்டணி பற்றிய மக்களின் முடிவு அவசியமான ஒன்றாகவே இருக்கும். இந்த சமூக ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலம் தமிழ்ச் சமூகம் எந்த திசையில் பயணிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டவே செய்யும்.