பணத்தாசை காட்டுவதாக புகார்.. மற்றொரு கூவத்தூர் கூத்துக்கு ரெடியாகிறது தமிழக அரசியல்?
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து தங்கள் அணிக்கு தாவுவதற்கு எடப்பாடி அணி மற்றும் டிடிவி தினகரன் அணிியினர் பேரம் பேசுவதாக எம்எல்ஏ சண்முகநாதன் கூறியுள்ள கருத்து தமிழக அரசியல் மற்றொரு கூவத்தூர் கூத்துகளை நோக்கி செல்கிறதோ என்று எண்ண வைக்கிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இதில் சசிகலாவுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஓபிஎஸ்ஸுக்கு 11 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது.
சென்னையிலோ அல்லது அவரவர் தொகுதியிலோ எம்எல்ஏக்களை உலவ விட்டால் அவர்களை எதிரணியோ அல்லது எதிர்க்கட்சியோ விலைக்கு வாங்கக் கூடும் என்று சசிகலா கருதினார். இதனால் கூவத்தூரில் உள்ள தங்கும்விடுதியில் அவர்களை "சகல" வசதிகளுடன் தங்க வைத்தார்.
ஆடம்பரம்
அந்த ரிசார்ட்டில் இருந்த அனைத்து 56 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டது. ஒரு அறையின் வாடகை நாளொன்றுக்கு ரூ.2,800 ஆகும். அதுமட்டுமல்லாது உணவு, மதுபானம் ஆகியவற்றுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுவது அந்த ரிசார்ட்டில் வாடிக்கையாம்.
குதூகலம்
படகில் சவாரி செய்வதற்கு தனிக்கட்டணம் உண்டு. எம்எல்ஏக்கள் அந்த ரிசார்டில் குதூகலமாக இருந்தனர். சசிகலா தரப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களும் ரிசார்டில் தங்கியிருந்தனர். தொகுதி மக்கள் செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பி கோரிக்கைவிடுத்தும், அதை ம்கள் பிரதிநிதிகள் மதிக்காத கூத்துக்கள் எல்லாம் அரங்கேறியது.
பணம், தங்கம்
122 எம்எல்ஏக்களுக்கும் கட்டிக் கட்டியாக தங்கம், பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்து டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி தமிழக மானத்தை தேசிய அளவில் கப்பலில் ஏற்றியது. எம்எல்ஏ சரவணன், கனகராஜ் ஆகியோரிடம் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக வாக்குமூலத்தை பதிவு செய்ததாக ஆங்கில சேனல் ஒன்று செய்தி ஒளிபரப்பியது.
உச்சகட்ட பரபரப்பு
இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஆளுக்கு ரூ.5 கோடி வரை பேரம் பேசப்படுவதாக சண்முகநாதன் கூறியுள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. தினகரன் வரும் 5ம் தேதி கட்சி அலுவலகம் வர உள்ள நிலையில், எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளன. எனவே, இதுபோல என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.