ஹைகோர்ட் ஜட்ஜ் என்று கூறி முட்டாளாக்கிய சுகேஷ்.. ஒப்புக் கொண்ட தினகரன் பகீர் தகவல்கள்!
இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி பேரம் பேசிய சுகேஷ் சந்திரசேகர் தம்மை ஹைகோர்ட் ஜட்ஜ் என்றும் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு உள்ளதாகவும் கூறிய பேரம் பேசியதாக டெல்லி போலீஸ் திடுக்கிடும் தகவலை வெளியிட
சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் ரூ 50 கோடி பேரம் பேசி, முன்பணமாக ரூ1.30 கோடி கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர், தம்மை ஹைகோர்ட் ஜட்ஜ் என்று பொய்சொல்லி பேசியது அம்பலமாகியுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் மல்லுக்கட்டின. இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனையடுத்து இரட்டை இலையை எப்பாடு பட்டாவது பெற வேண்டும் என்று சசிகலா அணி முயற்சி செய்தது.
சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக தினகரன் தரப்பினருடன் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பேரம் நடப்பதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. கடந்த 17ஆம் தேதியன்று பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தங்கியிருந்த அறையில் இருந்து ரூ.1.30 கோடி பணம் இருந்தது கைப்பற்றப்பட்டது. பிடிபட்டவர் இடைத்தரகர் என்றும் தெரியவந்தது.
சுகேஷ் வாக்குமூலம்
அவர் அளித்த வாக்குமூலத்தில். இரட்டை இலை சின்னத்தை பெற்று தர டிடிவி.தினகரன் தரப்பினர் ரூ.50 கோடி வரை தர பேரம் பேசினார். அதில் முதல்கட்டமாக ரூ.1.30 கோடி கொடுத்தனர். முன்னாள் உள்துறைச் செயலாளரும் தற்போது டெல்லியில் முக்கிய பதவியில் உள்ள ஒரு அதிகாரிதான் என்னிடம் பேசினார். எனக்கு தேர்தல் ஆணையத்தில் யாரையும் தெரியாது. ஆனால் பொய் சொல்லித்தான் பணத்தை ஏமாற்றி வாங்கினேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தினகரனிடம் விசாரணை
இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி போலீசார் நேரில் ஆஜராகக் கோரி உத்தரவிட்டனர். அதன்பேரில் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்ற தினகரனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
500க்கும் மேற்பட்ட கேள்விகள்
தினகரனிடம் இரண்டு நாட்கள் கிடுக்கிப் பிடி கேள்விகளை கேட்டுள்ளனர். உங்களுடன் டெல்லியிலிருந்து பேசியவர்கள் யார்... யாரையெல்லாம் உங்களுக்கு இங்கு தெரியும் என்பதை விவரமாக சொல்லுங்கள்...' என்கிற கேள்விக்குப் பதிலளித்த தினகரன் ‘எனக்கு ஏகப்பட்ட நபர்களை இங்கு தெரியும். சிலருடன் அரசியல் ரீதியாக பேசுவதுண்டு. மற்றபடி அனைவரிடமும் எல்லா விஷயங்களையும் பேசுவதில்லை என்று கூறினாராம்.
எப்போது முடியும்
அனைத்துக் கேள்விகளுக்கும் நோ, நாட் பாசிபிள் என்றே பதில் சொல்லியிருக்கிறார். சில கேள்விகளுக்கு மட்டும் விவரமாக, பொறுமையாக ஆங்கிலத்தில் பதிலை கூறினாராம். எப்போது விசாரணை முடியும்? இன்னும் இருக்கிறதா? என்று கேட்டவரிடம் எங்களுக்கு வேண்டிய பதிலைத் தரும்வரை விசாரணை நடக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுகேஷ் ஆடியோ
இந்த நிலையில்தான் சுகேஷ் சந்திரசேகர் பேசிய ஆடியோவை முன்வைத்தும் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் டிடிவி தினகரன் தரப்பு ஆட்களிடம் பேசிய சுகேஷ், தான் ஹைகோர்ட் நீதிபதி என்றும் தனக்கு தேர்தல் ஆணையத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை தன்னால் பெற்றுத்தர முடியும் என்று கூறிய சுகேஷ், இதற்காக 50 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முட்டாளாக்கிய சுகேஷ்
இரட்டை இலை சின்னத்தை எப்பாடு பட்டாவது பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு முயற்சி செய்வதைப் பார்த்தே சுகேஷ் பணத்தை கறந்துள்ளார். தற்போது டிடிவி தினகரனின் பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் சுகேஷை நேரடியாக அழைத்து வந்து தினகரனுக்கு முன்பாக வைத்தும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
விரைவில் கைது
கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற விசாரணையில் டிடிவி தினகரன் பல கேள்விகளுக்கு அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. எனவே டிடிவி தினகரனை கைது செய்ய ஆலோசனை நடைபெற்று வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது செல்போனில் இருந்து யாருக்கும் பேச அனுமதிக்கவில்லையாம். இதை வைத்து பார்க்கும் போது டிடிவி தினகரன் விரைவில் கைது செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது.