சென்னை, மதுரையைத் தொடர்ந்து அடுத்து திருச்சியில் “போஸ்டர்” ஒட்டிய பிடபிள்யூடி காண்டிராக்டர்கள்!
திருச்சி: சென்னை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் ஊழல் செய்த பொதுப்பணித்துறையினர் பட்டியல் வெளியிடப்படப்போவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், ஊழலுக்கு எதிராக போராடும் மாநில தலைவருக்கு திருச்சி மண்டல பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் டெண்டர் விட்டு செய்யப்படும் அரசு பணிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 45 சதவீதம் வரை கமிஷன் பெறுவதாகவும், இப்படி லஞ்சம் பெறும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிடப்போவதாகவும் சென்னையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், அதன் தலைவர் குணமணி தலைமையில் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் அலுவலகத்தில் 10 ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. அதில்,
"சென்னையில் நடைபெற்ற சங்கடமான விஷயங்கள் அனைத்தும் உண்மை. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒப்பந்ததாரர்களின் மனநிலையின் வெளிப்பாடு தான் அந்த நிகழ்வு. இதற்காக துணிந்து போராடும் மாநில தலைவர் குணமணிக்கு பரிபூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவது.
பொதுப்பணித்துறையின் நீரியல் பிரிவு பொறியாளர் தேவராஜ், ஒப்பந்ததாரர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆதரவாக செயல்படுவதற்கு நன்றி தெரிவிப்பதோடு அவரது மன உறுதிக்கு பாராட்டு தெரிவிப்பது.
அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கும், அரசு பணிகளுக்கும், மனசாட்சிக்கும் நேர்மையாக நடந்து பணியாற்ற வேண்டும் எனவும், ஊழலுக்கு துணைபோகாமல் தங்கள் பணிகளை மக்களுக்காக அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொள்வது. தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக சென்னை மண்டலத்தில் நடைபெற்று வரும் அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையேயான ஓர் அசாதாரண சூழ்நிலையை தீர்த்து வைக்கவும் ஒப்பந்ததாரர்களின் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் இடர்பாடுகளை களையவும் அரசு எந்திரம் உடனடியாக தலையிட்டு ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வது.
சென்னையில் நடந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் சார்பில் ஒப்பந்ததாரர்களை தாக்கி தரக்குறைவாக அறிக்கை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது. மேலும் இது தொடருமானால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்வது. பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளுக்கான விலைப்பட்டியல் சந்தை விலைக்கும் நடைமுறையில் உள்ள கூலிகளுக்கும் பொருந்தும் வகையில் வெளியிடவேண்டும் என கேட்டுக்கொள்வது" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இத்தீர்மானங்களின் முதல்கட்டமாக திருச்சியில் பொதுப்பணித்துறை ஊழல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.