சென்னையில் நேற்றிரவு திடீர் மின்வெட்டு ஏன்? விளக்கம் சொல்லும் அதிகாரிகள்
சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். திடீர் மின்வெட்டுக்கு காரணம் தெரியாமல் பலரும் தவித்தனர்.
மின்தடையை ஏற்படுத்தி விட்டு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாகவும் சிலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கோயம்பேடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்வாரிய மூத்த ஆதிகாரி ஒருவர், கோயம்பேடு துணை மின்நிலையத்தில் அதிக சுமை காரணமாக, கேபிள்களில் தீ பற்றியது. இந்த தீ அடுத்தடுத்து பரவியது. இதனால், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன்பின்னர், இன்று விடியற்காலை 1 மணியளவில் அணைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், சில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை 7 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என்றார்.
போதுமான மின் இருப்பு கைவசம் இருந்தாலும், கோடை காலங்களில் இது போன்று சில இடையூறுகள் ஏற்படுவதால் மின்வெட்டு ஏற்படுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.