கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி தொடங்கியது!!
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் இன்று காலை மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 2 அணு உலைகள் உள்ளன.
முதல் அணு உலையில் கடந்த 2013 அக்டோபர் 22-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. 2014 ஜூலையில் இந்த மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டியது.
இதை தொடர்ந்து டிசம்பர் 31-ந் தேதி வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்பு பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பின்னர் 7 மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 21-ந் தேதி இதில் அணுக்கரு பிளவு நடந்தது. இதையடுத்து இன்று காலை 7.12 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.