பால்குடம்... காவடி... தீச்சட்டி .... 2015ல் தமிழக அமைச்சர்களின் அரசியல் நிகழ்வுகள்
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதலாகவே விடுதலைக்காகவும், மீண்டும் முதல்வர் ஆக வேண்டியும், அதிமுகவினர் கோவில் கோவிலாக சென்று யாகங்களும் பால்குடங்களும் எடுத்து வேண்டிக்கொண்டனர். மீண்டும் முதல்வர் ஆவார் ஜெயலலிதா என்று திரும்ப திரும்ப கூறிவந்தனர் அதிமுகவினர். அவர்களின் நம்பிக்கையும் வேண்டுதல்களும் பலித்துவிட்டது. குமாரசாமியின் தீர்ப்பினால் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.
5வது முறை முதல்வராக கடந்த மே 23ஆம் தேதி பதவியேற்றார் ஜெயலலிதா. இதனையடுத்து பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். காவடி எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், உருள்வலம் வருதல் என அமைச்சர்களும், அதிமுகவினரும் பண்ணிய அட்ராசிட்டியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கூட செய்தி வெளியிட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகால சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. அன்றைய தினம் தமிழகமே பற்றி எரிந்தது. கடையடைப்புகளும், கல்லெறிகளும் நடத்தி தமிழக மக்களின் ஒட்டு மொத்த அதிருப்தியை சம்பாதித்தனர் அதிமுகவினர். சில தினங்களில் காட்சி மாறியது. உண்ணாவிரதம், கோவில்களில் வேண்டுதல்கள் என ட்ரெண்ட்டை மாற்றினர். அமைச்சர்களும், எம்.எல். ஏக்களும் கடந்த 8 மாதகாலமாக கோவில் கோவிலாக ஏறி இறங்கினர்.
ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும் அவருக்காக வேண்டிக்கொண்ட அதிமுகவினர் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி தீர்த்தனர்.
ஐயப்பனுக்கு இருமுடி
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி மற்றும் அவருடன் சேர்த்து 32 மகளிர் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயத்தில் இருமுடி கட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று பதினெட்டு படியேறி வழிபாடு செய்தனர்.
பிறந்தநாள் விழா பால்குடம்
ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் அவர் நீடுழி வாழவும், நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபட்டு தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக அமர வேண்டியும் தமிழக அமைச்சர்களும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
6700 பேருக்கு வேஷ்டி சேலைகள்
6700 பேருக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கப்பட்டது. இதன் பின்னர் சாத்தூர் தொகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பழங்கள்,ரொட்டி,பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது. ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அணிவித்தார்.
சிலுவையில் அறைதல்
கராத்தே வீரர் ஹூசைனி சிலுவையில் அறைந்து கொண்டு அனைவரையும் அதிர வைத்தார். ஹூசைனியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. கிறிஸ்தவர்களை புண்படுத்தி விட்டார் ஹூசைனி என்று சர்ச்சை கிளம்பியது.
969 கோவில்களில் வில்வ மரக்கன்று
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த விழாவில் அலகு குத்தி ஜெயலலிதாவுக்காக வேண்டுதலை நிறைவேற்றினர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 969 திருக்கோவில்களில் வில்வ மரக்கன்றுகள் நடப்பட்டது.
பறவைக் காவடி
சேலத்தில் சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ எல்லைப் பிடரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பலரும் நே்த்திக் கடனுக்காக காவடி தூக்கினர்.அதில் அதிமுகவினர் சிலரும் பங்கேற்று பறவைக் காவடி, தூக்குக் காவடி என விதம் விதமாக தூக்கி வேண்டிக் கொண்டனர்.
செந்தில் பாலாஜி
ஜெயலலிதாவுக்காக கோவில் வழிபாடு, சிறப்பு பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னி சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்கு பூஜை என அடுத்தடுத்து செய்து வந்த செந்தில் பாலாஜி, தாடி வளர்த்து முழு சாமியாரைப்போல் காட்சியளித்தார்.
மாரியம்மனுக்கு காவடி
உலகத்திலேயே மாரியம்மனுக்கு காவடி எடுத்த ஒரே நபர் செந்தில் பாலாஜியாகத்தான் இருந்திருப்பார் என்று ஊடகங்கள் கிண்டலடித்தன. வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலக்கினர்.
கரூரில் 5000 மொட்டைகள்
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலை ஆனதையொட்டி பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்து தங்களது பிரார்த்தனை நிறைவேற்றி வருகின்றனர். கரூர் மாவட்ட அதிமுகவினர் சுமார் 5000 பேர் கரூர் மாரியம்மன் கோயிலில் மொட்டையடித்தனர்.
சத்ரு சம்ஹார யாகங்கள்
கோவில் கோவிலாக யாகம் நடத்தி, கூடவே அன்னதானம், ஆடைதானம் கொடுத்து அசத்தினர் அதிமுகவினர். கூட தீச்சட்டியும் ஏந்தினார் அமைச்சர் வளர்மதி.
இடைத்தேர்தல் களேபரம்
5வது முறையாக முதல்வரான ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது தீச்சட்டி, காவடி ஏந்திய கைகள் இரட்டை இலையை ஏந்தின.
ஆர்.கே.நகரில் அமர்களம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் எல்லோரும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜியோ, தலையில் அதிமுகவின் இரட்டை இலை பல்பு மாட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தது வைரலானது.
தொண்டரின் அன்னதானம்
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், வருகின்ற 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து ஜெயலலிதா தமிழக முதல்வராக வேண்டி, ஒட்டன்சத்திரத்தில சிறப்பு வழிபாடு மற்றும் ஆதரவற்ற இல்லத்தில் அன்னதானம் வழங்கினார் அதிமுக தொண்டர் என்.பூபதி.
சட்டசபை தேர்தலில் பதில்
ஆக மொத்தத்தில் 2015ம் ஆண்டு அதிமுகவினர் கோவில் கோவிலாக ஏறி இறங்கி புண்ணியம் தேடிக்கொண்டனரே தவிர மக்களுக்கு பயனுள்ள வகையில் என்ன செய்தார்கள் என்பதை அவர்களாக அறிக்கை விட்டால்தான் உண்டு. இதற்கெல்லாம் அடுத்த தேர்தலில் பதில் சொல்ல காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.