தில்லுமுல்லு கட்சி= திமுக, அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி= அதிமுக- இது பிரேமலதா
சென்னை: திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி. அதிமுக என்றால், அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி. திமுக, அதிமுகவை தமிழகத்தைவிட்டு விரட்டும் நேரம் வந்து விட்டது என்று தேமுதிக மகளிரணி மாநாட்டில் விளக்கம் கூறி அப்ளாஸ் அள்ளியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
இங்கிட்டு போவாரா? அங்கிட்டு போவாரா? என்னதான் முடிவெடுப்பார் விஜயகாந்த்? என்று தமிழக வாக்காளர்களும், அரசியல் கட்சியினரும் தவித்துக்கொண்டிருக்க, நான் தெளிவாத்தான்யா இருக்கேன், எனக்கு யாரும் பாடம் நடத்த வேணாம் என்பது போல பேசி நான் தனியாத்தான் போட்டியிடப்போறேன் என்று சொல்லி அரசியலில் 6 முனைப் போட்டியை உருவாக்கி விட்டார் விஜயகாந்த்.
விஜயகாந்தின் இந்த முடிவினால் அதிமுக, திமுக, பாமகா, மநகூ, பாஜக, தேமுதிக என இந்த சட்டசபை தேர்தலில் 6முனை போட்டி ஏற்பட்டுள்ளது. காஞ்சி மாநாட்டில் குழப்பிவிட்டார் விஜயகாந்த் என்று எல்லோரும் சொல்ல, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டில் தெளிவாகவே மேடை ஏறி பேசினார் விஜயகாந்த்.
அவருக்கு முன்பாக மைக் பிடித்த தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா, திமுக, அதிமுகவை கடுமையாக சாடியதோடு, தங்களின் நிலைப்பாட்டை தொண்டர்களுக்கும், பிற அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் புரிய வைக்கும் வகையில் பேசினார்.
பணம் வாங்க மாட்டார்
கேப்டனை பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர் மற்றவர்களுக்கு கொடுப்பாரே தவிர, யாரிடமும் கைநீட்டி பணம் வாங்க மாட்டார் என்று கூறிய பிரேமலதா, அவர் நடிகராக இருக்கும்போது, இயக்குநரிடம் மட்டும் தனது சம்பளத்தை கைநீட்டி வாங்கியிருப்பார். இப்போது யாரிடமும் வாங்க மாட்டார் என்றார்.
நிலைத்து நிற்பார்
அவரது தொண்டையில் டான்சில் பிரச்னை இருப்பதால்தான் அவரது பேச்சு சற்று குளறுபடியாக இருக்கிறது. அதை வைத்து எப்படியெல்லாமே எழுதுகிறீர்கள் என்று வருத்தப்பட்ட பிரேமலதா, காமராஜரைப் போல, எம்.ஜி.ஆரைப் போல கேப்டன் பெயரும் கண்டிப்பாக நிலைத்து நிற்கும் என்று பிரேமலதா சொன்ன போது அதைக் கேட்டு ரசித்து சிரித்தார் விஜயகாந்த்.
திமுக, அதிமுக விளக்கம்
திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி, அதிமுக என்றால், அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி. திமுக, அதிமுகவை தமிழகத்தைவிட்டு விரட்டும் நேரம் வந்து விட்டது என்று ஆவேசமாக கூறிய பிரேமலதா, திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தேமுதிக என்றார். தேர்தல் கூட்டணி தொடர்பான நல்ல முடிவை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறி முடித்த போது கூட்டத்தில் மகளிரணியினர் எழுப்பிய கைத்தட்டல் அடங்க சற்று நேரமானது.
அடக்கி வாசித்த பிரேமலதா
காஞ்சி மாநாட்டில் பேசிய போது முதல்வர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய பிரேமலதா, கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அதனால்தானோ என்னவோ ராயப்பேட்டையில் தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்தார். கடந்த சட்டசபை தேர்தலில் அனைத்திலும் தில்லுமுல்லு கட்சியோடு இணைந்துதான் அரியணையில் இருந்த தில்லுமுல்லு கட்சியை வீழ்த்தினார் விஜயகாந்த் என்று நேற்றைய பிரேமலதாவின் பேச்சுக்கான கமெண்ட் ஆக இருக்கிறது.
மே 19ல் தெரியும்
ஆடல் பாடல், குத்து டான்ஸ் என அமர்களமாக சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது தேமுதிகவின் மகளிரணி மாநாடு.
யார் கூடவும் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் அறிவித்தது, தமிழக அரசியலில் ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளதா? அல்லது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதா? மே 19ம் தேதி தெரியும்.