அடுத்தடுத்து தொடரும் சிறைச்சாலை மரணங்கள்... தற்கொலைக் கூடங்களாக உருமாறும் அவலம்!
-பா. கிருஷ்ணன்
சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் கைதிகள் திடீரென்று தற்கொலை செய்துகொள்ளும் விபரீத நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
நிவேதா என்ற ஆசிரியையை கார் ஏற்றிக் கொன்றதாகக் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட தீயணைப்புப் படை வீரர் இளையராஜா என்பவர் புழல் சிறைச்சாலையில் புதன்கிழமை தூக்கிட்டு இறந்திருக்கிறார். சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த அவர் கொலைக் குற்றம் தொடர்பாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் கழிவறை ஜன்னலில் லுங்கியைக் கட்டி தூக்கிட்டு இறந்தார் என்றும் போலீசார் கூறுகிறார்கள்.
சென்னை அண்ணாநகரில் நிவேதா மீது கடந்த திங்கள்கிழமை கார் மோதி கொலை செய்ததாக இளையராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு தினங்களில் சிறையில் இருந்த அவர் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு சிறையில் உள்ள கைதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது பல கேள்விகளை எழுப்புகிறது.
கடந்த ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டுமே இதைப் போல் பத்து சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவை செய்திகளாகப் பதிவு செய்யப்பட்டவைதான். இன்னும் ஊடக வெளிச்சத்திற்கு வராதவை எத்தனையோ..
சிறையில் தற்கொலை செய்து கொள்வது ஆண்கள் மட்டுமல்ல. பெண்களும் கூட. புதுவைச் சிறையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி அம்பிகா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சிறுமிக்குத் திருமணம் செய்த வழக்கு தொடர்பாக அம்பிகா, வள்ளி ஆகிய பெண்கள் புதுவை காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதே வழக்கில் சிவகுமார், ரவிகுமார் ஆகியோர் காரைக்கால் சிறையில் உள்ளனர்.
விசாரணைக் கைதியாக உள்ள நிலையில், அம்பிகா திடீரென்று சிறைக் கழிவறை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி வேலூர் சிறையில் ராஜா என்ற கைதி தற்கொலை செய்துகொண்டார். அவரை சண்முகசுந்தரம் என்ற சிறைத் துறைக் கண்காணிப்பாளர் மிரட்டியதாகவும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மனவேதனையில் ராஜா தற்கொலை செய்துகொண்டார் என்று செய்திகள் வெளியாயின.
கடந்த ஆண்டு ஜூலையில் சென்னை சிறை வளாகத்தில் ஷேக் அப்துல்லா என்ற கைதி மரத்தில் கைலியைக் கட்டி தூக்கிட்டு இறந்தார். அதன் காரணம் தெரியவில்லை.
எல்லாவற்றையும் பரபரப்பாகப் பேசப்பட்டது ஒரு என்ஜினீயரின் கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞர் சிறையில் மின்சாரம் பாயும் கம்பியைப் பல்லால் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற சம்பவம்தான்.
கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தி்ல சுவாதி என்ற பொறியாளர் அதிகாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, ஜூலை 1ம் தேதி ராம்குமார் என்பவரை நெல்லையில் கைது செய்தனர்.
விசாரணைக் கைதியாக இருந்த ராம்குமார் சிறையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது குறித்து ஏராளமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. எல்லாமே தற்போது விசாரணையில் இருக்கின்றன.
இச்சம்பவம் நடந்த சில மாதத்தில் அக்டோபர் மாதம் அதே புழல் சிறையில் டில்லி ராஜா என்பவர் மின்கம்பியைப் பிடித்து தற்கொலை க்கு முயற்சி செய்தார். எனினும் அவரை போலீசார் மீட்டுவிட்டனர். இருந்தாலும், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலையைத் தொடர்ந்து மற்றொரு கைதி குண்டூசியை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்புராஜ் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திடீரென கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி குண்டூசியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இந்தத் தகவலை அறிந்த சிறை காவலர்கள், கைதி அப்புராஜை மீட்டு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கு சில வாரங்கள் கழித்து நவம்பர் 29ம் தேதி புழல் சிறையில் பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் பெரியசாமி என்ற கைதி. சிறைக்காவலர்கள், உடனடியாக, பெரியசாமியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சேலம் மத்திய சிறையில் அஜீத்குமார் (23) என்ற கைதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தார். டிசம்பர் 4ம் தேதி சிறைக்குள் தூக்கிட்டு இறந்திருக்கிறார். இதற்கும் காரணம் தெரியவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் கடலூர் மத்திய சிறையில் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ராஜமாணிக்கம் என்ற கைதி கைலியைக் கட்டி தூக்கிட்டு இறந்திருக்கிறார். இதற்கும் காரணம் தெரியவில்லை.
முசிறியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 20ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட அவர் தனக்குத் தானே மண்டையை உடைத்துக் கொண்டும், காயப்படுத்திக் கொ ண்டும் இருந்திருக்கிறார். மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். மருந்துகளையும் சாப்பிட்டு வந்திருக்கிறார்.
அதைப் போல் கடலூர் சிறையில் இருந்த அமுல் பாபு என்ற கைதி எய்ட்ஸ் நோய்க்கு ஆளானதால் மனமுடைந்து கடந்த ஏப்ரல் 14ம் தேதி சிறைச் சுவரில் தன் தலையை முட்டிக் கொண்டு, படு காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பே இறந்துவிட்டார்.
மரண தண்டனைக்கு அஞ்சி தற்கொலை சிறையில் இறந்த கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அண்மையில் நடந்திருக்கிறது. சென்னை புறநகரான கோயிலம்பாக்கம் என்ற இடத்தைச் சேர்ந்த துரை (35) என்பவர் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட செய்தியை அறிந்த அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். தனக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று பயப்பட்ட அவர் கடந்த 6ம் தேதி சிறையில் உள்ள சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பொதுவாகச் சிறைச்சாலைகளில் குறிப்பாக சென்னை புழல் சிறை அதிக பாதுகாப்பு இருக்கும். ஆனால், தற்கொலைச் சம்பவங்களும் தற்கொலை முயற்சிகளும் அடிக்கடி நடப்பது பல கேள்விகளை ஏற்படுத்துகின்றன.
முதலில் கைதிகள் எளிதாகத் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் கண்காணிப்பு, காவலர் நடமாட்டம் போதுமானதாக இல்லையா..?
தற்கொலை செய்து கொள்ளும் அல்லது தற்கொலை முயற்சி செய்யும் கைதிகளில் சிலர் சிறைத் துறையினர் துன்புறுத்துவதாகத் தகவல் வெளியாகின்றனவே, மனித உரிமைகள் சரிவரப் பாதுகாக்கப்படவில்லையா...?
மன உளைச்சல், மனவேதனை, மனநிலை பாதிப்பு ஆகியவை காரணங்களாகவும் இச்சம்பவங்கள் நடக்கின்றன. கைதிகளின் குற்றச் செயல்களுக்குத் தண்டனை அளிக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் அளிக்கும் யோசனைகளை அரசோ சட்டத் துறையோ ஏன் கருத்தில் கொள்ளவில்லை..?