வி.எச்.பி. ராமராஜ்ய ரதயாத்திரையை கண்டித்து சென்னை, சேலத்தில் சாலை மறியல்!
தமிழகத்திற்குள் வந்துள்ள விஎச்பியின் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிராக சென்னை, சேலத்தில் பல்வேறு அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : விஷ்வஇந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ராமராஜ்ய ரதயாத்திரை தமிழகத்திற்குள் வந்துள்ளதை கண்டிக்கும் விதமாக சென்னையில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி மற்றும் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.
ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வஇந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராமராஜ்ய ரதயாத்திரையானது நடைபெற்று வருகிறது. மத்தியபிரதேசத்தில் தொடங்கி கேரளா வந்துள்ள இந்த ரதயாத்திரையானது, தமிழகத்திற்குள் நெல்லை மாவட்டம் புளியரை வழியாக வந்து செங்கோட்டை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கிறது.
இன்று மாலைக்குள் மதுரை சென்றடைந்து அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் புளியரை, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவில் வந்து இவர்கள் ரதயாத்திரைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதே போன்று சிம்சன் சிக்னல் அருகே திராவிடர் கழகத்தினர் மறியலில் ஈடுபட்டனர். சென்னை பல்லாவரத்திலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 30க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலையின் நடுவே படுத்துக்கொண்டு கைகளையும், கால்களையும் பின்னிக்கொண்டு படுத்திருந்தனர். ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும், திருமாவளவனை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.