கோவையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மிட்டாய் விற்கும் பெண்ணை தாக்கிய பொது மக்கள்!
மிட்டாய் விற்கும்பெண் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து தாக்கப்பட்டார்.
கோவை: கோவையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மிட்டாய் விற்கும் பெண்ணை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மகாலட்சுமி கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன், 43, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி, இவர்களுக்கு ஏழு வயது குழந்தை சாந்தி செல்வி. இந்நிலையில், நேற்று, 34 வயது மதிக்க தக்க ஒரு பெண் லட்சுமி வீட்டை தட்டி இந்த பகுதியில் மொட்டை அடித்த படி ஒரு பெண் குழந்தை இருந்ததே எங்கே என கேட்டு உள்ளார்.

திடுக்கிட்ட லட்சுமி, "என் வீட்டிற்கே வந்து என் பிள்ளையவே கேட்கிறீயா? நீ யார் குழந்தை கடத்துற நபரா" என்று பயந்து சத்தம் போட்டுள்ளார். லட்சுமியின் சத்தம் கேட்டு வந்தவர்கள் சிலர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி இரண்டு கைகளையும் கட்டி வடவள்ளிகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், என் பெயர் மகாலட்சுமி 34, கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள சாமி ஐயர் புது வீதியில் வசிக்கிறேன். என் கணவர் பெயர் அழகர்சாமி. நான் கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அங்கே வேலைக்கு சேர்ந்தேன். குழுவில் தயாரிக்கப்படும் மிட்டாயை வீடுவீடாக சென்று விற்கும் வேலை செய்து வருகிறேன். நேற்று முன் தினம் மாலை வீட்டிற்கு செல்லும்பொழுது அந்த குழந்தையிடம் மிட்டாய் கொடுத்து விடும்படி முதியவரிடம் கொடுத்தேன். அதே வழியில்தான் வேலைக்கு செல்லும் வழி என்பதால்தான் அந்த பெண்ணை கேட்டேன்" என்றார்.
இதையடுத்து மகாலட்சுமியின் கணவர் அழகர்சாமி காவல்நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது அவர், தன் மனைவிக்கு சற்று மனநலம் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, மகாலட்சுமியை போலீசார் விடுவித்து அழகர்சாமியுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications