உங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்களா?
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றும் பிப்ரவரி 22ம் தேதியும் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி கன்னியாகுமரி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாமில் 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகள் பயன் பெறவுள்ளனர்.
இம்முகாம்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள் நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1246 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சுமார் 4894 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 233 ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவையான சொட்டு மருந்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுபாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுதுறை மற்றும் காந்தி மண்டபம் ஆகிய இடங்களில் 17 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலை பகுதிகளில் 8 நடமாடும் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஆய்வுப்பணிகளுக்கு 160 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு
தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது.
பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.