வாக்கு சதவீதம் குறைவு.. ஆட்டையைபோட்ட ஆர்.கே.நகர் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் அமைச்சர்கள்!
சென்னை: பணம் பட்டுவாடா செய்வதில் பெரும் முறைகேடு நடந்ததால் ஆர்.கே.நகர் மக்கள் அதிருப்தியடைந்ததாகவும் அதனால் வாக்களிப்பு சதவீதம் குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆர்.கே.நகரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவில், 74.4 சதவீதம் வாக்குகளே பதிவாகின. முதல்வர் பதவியிலுள்ளவரான ஜெயலலிதாவே போட்டியிட்டும் வாக்கு சதவீதம் 75 விழுக்காட்டை எட்டவில்லை என்பது ஆளும் கட்சிக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
திணிக்கப்பட்ட தேர்தல்
அதிமுகவின் வெற்றிவேலனுக்கு 5 ஆண்டுகள் தங்கள் மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதற்குதான் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், அவரோ, காரணம் கூட சொல்லாமல், திடீரென கட்சி தலைமைக்காக மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால், ஆர்.கே.நகருக்கு நடைபெற்ற தேர்தல் என்பது திணிக்கப்பட்ட ஒரு தேர்தலாகும்.
வாக்கு ஏன்?
ஆட்சியில் உள்ளவர்கள் வசதிக்காகவும், அவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மக்களின் வரிப்பணத்தை வீண் செய்து நடத்தப்பட்ட ஒரு தேர்தல்தான் இது என்ற விழிப்புணர்வு தமிழக மேல்தட்டு மக்களுக்கு மட்டுமின்றி, பின்தங்கிய தொகுதியான ஆர்.கே.நகர் மக்களுக்கும் நன்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் வாக்களிப்பதே வீண் வேலை என்ற கருத்துக்கு அவர்களில் பெரும்பாலானோர் வந்துவிட்டனர்.
அமைச்சர்கள் டார்கெட்
அதேநேரம், வாக்குகளை அள்ளி குவித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், அமைச்சர் பெருமக்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் குழுமியிருந்து, தொகுதி மக்களை நன்கு கவனிக்க தொடங்கினர். சாலைகளை புதுப்பித்தனர், மின் விளக்குகளை போட்டனர். திருவிழாக்கோலம் பூண்டது ஆர்.கே.நகர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நிர்வாகிகளும், மக்களை வளைத்துப்போட்டு கைக்குள் வைத்துக்கொண்டனர்.
நிர்வாகிகள் அபேஸ்
அமைச்சர்களுக்கு ஒவ்வொரு பகுதி பிரித்துக்கொடுக்கப்பட்டு வேலை நடந்தது. இதனால், தங்கள் பொறுப்புகளுக்கு உட்பட்ட பூத்துகளில் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து, நிர்வாகிகளுக்கு பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நிர்வாகிகளோ, கமுக்கமாக, அதை கக்கத்தில் வைத்து கப்-சிப் ஆகிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
எப்படியும் ஜெயிச்சிடுவோமில்ல..
ஜெயலலிதாவே போட்டியிடுகிறார், பலமான எதிர்க்கட்சிகள் போட்டியில் இல்லை, நமது ஆட்சியில் நடைபெறும் இடைத்தேர்தல்.. என்பது போன்ற பல காரணங்களால், வெற்றி உறுதிதானே, எதற்கு காசை செலவிடுவானேன், அமைச்சருக்கு தெரியவாப்போகிறது என்ற நினைப்பு பல நிர்வாகிகளுக்கு கடைசி கட்டத்தில் வந்துவிட்டதாம். இதனால், வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் பணத்தை 'கொண்டு சேர்க்கும்' பணி பல இடங்களில் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், தொகுதியிலுள்ள சில பகுதி மக்கள் செல்வ செழிப்போடு புழங்குவதை பார்த்த பிற பகுதி மக்கள், நமக்கு ஏன் கடவுள் கருணை காட்டவில்லை என்று மனதுக்குள் புழுங்கினர்.
நாங்க மட்டும் இளிச்சவாயர்களா..
இந்த புழுக்கம், வாக்குப்பதிவு நாளில் வெடித்துள்ளது. வாக்களிப்பு சதவீதம் குறைவதை பார்த்து, மதியம், மற்றும் மாலை வேளைகளில், வீடு வீடாக விசிட் அடித்து ஆள்பிடிக்க முயன்ற, ஆளும் கட்சி பிரமுகர்களிடம் பக்கத்து தெருவில் பலருக்கும் கையில் 5 ஆயிரம், 3 ஆயிரம் புழங்குகிறது. நாங்கள் மட்டும் ஓசி கிராக்கியா என்கிற அளவுக்கு திட்டிவிட்டார்களாம் மாத கடைசியில் பணப்புழக்கம் கம்மியாக இருந்த மக்கள்.
எத்தனை தலையோ
இந்த விவகாரம் தற்போது மேலிடம் கவனத்துக்கு சென்றுள்ளது. மானத்தை வாங்கிவிட்டார்கள் நிர்வாகிகள் என்று குமுறியுள்ளனர் சில அமைச்சர்கள். எத்தனை நிர்வாகிகள் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்பது ரிசல்ட் வந்ததும் நன்கு தெரிந்துவிடும் என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.