வாக்காளர்களுக்கு பணம் சப்ளையானது ஆதாரத்தோடு அம்பலம்.. ரத்தாகிறதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்?
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கோஷ்டி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் அள்ளி இறைக்கப்படுவது தொடர்பாக கிடைத்துள்ள ஆவணத்தால் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் கோஷ்டியினர் ஆர்.கே. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான ஆவணம் வெளியாகியுள்ளதால், அரவக்குறிச்சி போன்று இங்கு தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் தாங்கள் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தகிடு தத்தோம் வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டார். ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதே நேரத்தில், தினகரனுக்கு எதிராக ஆர்கே நகரில் உள்ளடி வேலைகள் பலவும் நடந்து வந்தன. இதனையெல்லாம் பொருட்படுத்தால் பணத்தை வாரி இறைத்து அசால்ட்டாக இருந்த தினகரனுக்கு ஐடி ரெய்டு வடிவில் வந்தது சோதனை.
அதிரடி ஐடி சோதனை
தமிழகம் முழுவதும் 35 இடங்களில் நேற்று ஐடி துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு அலுவலகங்கள் விடிய விடிய ஐடி துறையினரால் அலசப்பட்டன.
ரகசிய ஆவணம்
இந்த ரெய்டில் பல்வேறு ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்கான ஆவணங்களை ஐடி துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது அரவக்குறிச்சி தொகுதியில் கண்மண் தெரியாத அளவில் பணம் அள்ளி இறைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தேர்தல் ரத்தானது. தேர்தல் ரத்துக்கு முன்னர் பணப்பட்டுவாடா குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்று வெளியானது. அதன் அடிப்படையிலேயே தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து?
அதே போன்று தற்போது நடைபெற உள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாரி இறைக்க வைத்திருந்த பணம் தொடர்பான ஆவணம் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.