பொங்கி வழியும் குற்றாலம் அருவிகள் ... குளிக்கலாம் வர்றீங்களா?
குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொங்கி பெருகும் அருவியில் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வந்த தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க கடந்த 4 நாடகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ளப்பெருக்கு இன்று குறைந்ததை அடுத்து அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருவிகள் நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டும். மூலிகை மணம் நிறைந்த அருவி நீரில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மெயினருவியின் அருவியின் பிரமண்டத்தை பார்த்து அதிசயிக்காத சுற்றுலா பயணிகளே இல்லை என்று கூறலாம். சுமார் 50 அடிக்கும் மேல் உயரம் கொண்ட இந்த அருவியில் தண்ணீர் விழுந்த போதிலும் இதில் குளிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சும்மா அதிரும்ல
தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இல்லாத அளவுக்கு பாறையின வடிவம் இயற்கையாக அமைந்துள்ளதே இதற்கு காரணம். எத்தனையோ இடங்களில் உயரமான அருவிகள் இருந்தாலும் தண்ணீர் ஓரே அடியாக மேலிருந்து கீழே கொட்டுவதால் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அருவியில் குளித்தால் உடம்பு மசாஜ் செய்தது போல இருக்கும்.

பொங்கும் அருவி
குற்றாலம் மேலே உள்ள பொங்குமாங்கடல் என்னும் பகுதி தண்ணீரின் வேகத்தை கட்டுபடுத்தி பின்னர் பாறையில் வழித்தோடி அருவியாக கொட்டும் வண்ணம் இயற்கையாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுகிறது. 4 நாட்கள் தடைக்குப் பின்னர் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அருவிகள் நகரம்
குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.

அழகான அருவிகள்
குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன.

ஆர்பரிக்கும் தண்ணீர்
பழைய குற்றாலம் அருவி குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. மழையால் இந்த அருவியிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இந்த அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். இது சீசன் காலம் இல்லை என்றாலும் அருவிகளில் தண்ணீர் விழுவதால் உற்சாகமாக குளித்து மகிழலாம்... பொதிகை எக்ஸ்பிரஸ் பிடிங்க...குற்றாலத்தில போய் குளிச்சிட்டு வரலாம்.












Click it and Unblock the Notifications