களை கட்டும் ராஜ்யசபா தேர்தல்: அதிமுகவில் சீட் பிடிக்க கடும் போட்டி
சென்னை: ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற, அ.தி.மு.க.,வினர் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த, முகமதுஅலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்த ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகங்கா, மா.கம்யூ., கட்சியை சேர்ந்த ரங்கராஜன், ஆகியோரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ம் தேதி, நிறைவு பெறுகிறது.
இந்த பதவிக்கு பிப்ரவரி மாதம் 7ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது.
தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில், அ.தி.மு.க., எந்தக்கட்சி ஆதரவும் இல்லாமல், நான்கு இடங்களை பிடிக்கலாம். மற்ற கட்சிகள் அனைத்திற்கும், பிற கட்சிகளின் ஆதரவு தேவை. மா.கம்யூ., கட்சி ஒரு இடத்திற்கு, அ.தி.மு.க., ஆதரவை நாட முடிவு செய்துள்ளது. போட்டி ஏற்பட்டால், பிற கட்சிகளின் உதவியைப் பெறலாம் என, தி.மு.க., முடிவு செய்துள்ளது.
நால்வர் அணி
உறுதியாக போட்டியிட உள்ள, நான்கு இடங்களுக்கு, வேட்பாளரை தேர்வு செய்யும் பணி அ.தி.மு.க.,வில் நடந்து வருகிறது. இப்பட்டியலில் இடம் பெற, அ.தி.மு.க., முக்கியஸ்தர்கள், கட்சியின் நால்வர் அணியை முற்றுகையிட்டுள்ளனர்.
முந்திக்கொண்ட திமுக
கடந்த ஜூன்மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்ற போது, அ.தி.மு.க., முதலில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. திமுக வேட்பாளர் கனிமொழி என்பது கடந்த முறை உறுதி செய்யப்பட்டதாக இருந்தது.
ஆனால் இந்த முறை தி.மு.க., முன்னதாகவே முன்னாள் ராஜ்யசபா எம்.பி., சிவாவை, வேட்பாளராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலகங்காவிற்கு வாய்ப்பு
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சிலரும், ராஜ்யசபா எம்.பி.,யாக முயற்சித்து வருகின்றனர்.தற்போதைய நிலவரப்படி, ராஜ்யசபா எம்.பி., பாலகங்காவிற்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கமுத்துவுக்கு வாய்ப்பு
அதேபோல், கடந்த தேர்தலில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின் வாபஸ் பெறப்பட்ட, தங்கமுத்துவிற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். மீதமுள்ள இரு இடங்களுக்கு, கடும் போட்டி நிலவுகிறது.
பாத்திமா பாபு
முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு, முத்துக்கருப்பன், ஆதிராஜாராம்,தமிழ்மகன் ஹூசைன், முத்துக்கருப்பன் ஆகியோருடைய பெயரும் அடிபடுகிறது.
வேட்பாளர் யார்?
ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளதால், சில தினங்களில், வேட்பாளர் பட்டியலை, முதல்வர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது