ராம்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? விடை தெரியாத கேள்விகள்
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதியின் மரணம் எந்த அளவிற்கு அதிர்ச்சியை உருவாக்கியதோ அதே போல ஒரு அதிர்ச்சிகரமாக விவாதப் பொருளாகியிருக்கிறது ராம்குமாரின் மரணம். பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது ராம்குமாரின் மர்மமரணம்
பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து ராம்குமார் உயிரை மாய்த்துக்கொண்டான் என்று போலீஸ் சொல்வதை வம்சம் சீரியரில் வரும் குட்டிப்பெண் தேவிகா கூட நம்பாமல் 'அட போங்கப்பா... என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது.
ராம்குமார் தற்கொலைதான் செய்து கொண்டான் என்று போலீஸ் தரப்பும், இல்லை இல்லை இது கொலைதான் என்று ராம்குமார் தரப்பும் கூறி வருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று ராம்குமாரின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.
தமிழச்சியின் பதிவு
ராம்குமார் உடலை பரிசோதித்து விட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவர் அளித்த மருத்துவச் சான்றிதழில், "ராம்குமாரின் இடது கண்ணில் காயம், இடது மார்பில் காயம், இடது கையில் காயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், காயத்தின் அடையாளம் மற்றவரின் தாக்குதல் காரணமாகவே ஏற்படுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 'ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை' என்பதற்கு அரசு மருத்துவர் சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்த வேண்டும்." என்று தமிழச்சி பதிவிட்டுள்ளார்.
புழல் சிறையில் ராம்குமார்
புழல் சிறையில் டிஸ்பென்சரி செல் எனப்படும் பாதுகாப்பான அறையில்தான் ராம்குமார் அடைக்கப்பட்டிருந்தார். ராம்குமார் அடைக்கப்பட்ட டிஸ்பென்சரி பிளாக்கில் 6 சிறை அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில்தான் ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடன் இருந்த இரண்டு கைதிகளிடம் அவர் ஒருசில வார்த்தைகளை மட்டுமே பேசியுள்ளார்.
சிறையில் யாரும் ராம்குமாருடன் பேசுவதில்லையாம். இதனால் தனிமை அவரை கடுமையாக வாட்டியது. ராம்குமாரை நேரில் சந்தித்தவர்களிடமும் இந்த தகவலை அவர் சொல்லி கதறியுள்ளார். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற ராம்குமார், மீண்டும் தற்கொலை செய்ய அதிக வாய்ப்புள்ளதாக உயரதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை அதிகாரிகள் பெரிதாக கருதவில்லை.
ராம்குமாருக்கு மனஅழுத்தம்
ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை அறை திருநங்கைகளை அடைக்க ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதுவரை எந்த திருநங்கைகளும் அடைக்கப்படாத நிலையில் அங்கு ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தாராம். இதுவும் ராம்குமாரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாம்.
அவரை கடைசியாக சந்தித்த ராம்ராஜ், ராம்குமார் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. பொய்யான வழக்கில் நம்மை இப்படி சிக்க வைத்து விட்டார்கள் என்ற மன வருத்தம் தான். நான் பலமுறை அவரிடம் இந்த கொலைக்கும், உங்களுக்கும் ஏதும் தொடர்பிருந்தா சொல்லுங்க என்று பலமுறை கேட்டிருக்கிறேன். அப்படி ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
கடைசி நிமிடங்கள்
கடந்த 18ம் தேதி ராம்குமாரை கண்காணிக்கும் பணியில் பேச்சிமுத்து என்ற வார்டன் நியமிக்கப்படிருந்தார். காலையில் இருந்த ராம்குமார் மவுனமாகவே இருந்துள்ளார். வற்புறுத்தி சாப்பிடவைத்தனர். மதிய உணவு சாப்பிடவில்லையாம். மாலை 4 மணிக்கு மேல் யாருமே அந்த பிளாக்கில் இல்லை என்பதை தெரிந்த ராம்குமார், தற்கொலைக்கு முயன்று உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்ததும், உயரதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்கின்றனர் சிறைவாசிகள்.
கொலையும் தற்கொலைகளும்
மின்சார வயரை கடித்த உடன் ஷாக் அடிக்கும், அதிலிருந்து விடுபடத்தான் பொதுவாக தற்கொலைக்கு முயல்பவர்களின் மனநிலை இருக்கும். ஆனால் கொடூர கொலையை செய்யும் மனநிலை படைத்தவர்கள் தன்னுடைய மரணத்தையும் கொடூரமாகவே எதிர்கொள்ள தயாராகவே இருப்பார்கள். விழுப்புரம் செந்தில், தூத்துக்குடி கீகன் ஜோஸ் ஆகிய இருவருமே தன்னை காதலிக்க மறுத்த பெண்களை கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்து கொண்டனர்.
அதுபோல ராம்குமாரின் மனநிலையும் இருந்திருக்கலாம். ஏனெனில் போலீஸ் கைது செய்ய போனபோது ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டவர்தான். தற்கொலை மனநிலையில் இருந்த ராம்குமாரை கண்காணிக்கத் தவறியுள்ளது சிறை நிர்வாகம் என்பதும் சிலரது வாதமாக இருக்கிறது.
நீதி விசாரணை தேவை
சிறையில் மின்சாரம் மூலம் தற்கொலை செய்தது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு தூக்கு, கழுத்தை அறுத்து, உயரமான இடத்திலிருந்து குதித்து, தலையை சுவரில் பயங்கரமாக மோதி என பல கைதிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் ராம்குமார், மின்சாரத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்திருக்கும் தகவல் நம்பும்படியாக இல்லை. எனவே ராம்குமார் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்கின்றனர் ராம்குமார் தரப்பினர்.
உயர்பாதுகாப்பு சிறை
புழல் சிறையும் அதன் பாதுகாப்பு அமைப்பும் சாதாரணமானது அல்ல. சென்னை புழல் மத்திய சிறை மொத்தம் 220 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கே விசாரணை, தண்டனை, மகளிர், சிறுவர் சிறை, தீவிரவாதிகளை அடைக்க உயர் பாதுகாப்பு, செல் மற்றும் மருத்துவமனை, நூலகம், உணவகம் ஆகியவற்றுடன் தமிழகத்தின் மிகப்பெரிய சிறையாக மூன்றடுக்கு பாதுகாப்புடன் அமைந்துள்ளது. இந்த சிறையில்தான் இந்தியாவே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ஒரு விசாரணை கைதி மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
விடை தெரியாத கேள்விகள்
ராம்குமாரின் மரணத்தில் பல மர்மமுடிச்சுக்கள் இருப்பதாக சிறைவாசிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ராம்குமார் தற்கொலைக்கு முயலும் போதே சம்பந்தப்பட்ட சிறைகாவலர்கள் பார்த்திருந்தால் அதை தடுத்து இருக்கலாம். ராம்குமாரின் அலறல் மற்றும் சக கைதிகளில் சத்தம் கேட்ட பிறகே சிறைகாவலர்கள் அங்கு வந்துள்ளனர். இதன்பிறகே ராம்குமார் மீட்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ராம்குமாரை சிறையில் வந்து சந்தித்த சிலர்தான் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது. சுவாதி கொலையும், ராம்குமாரின் மர்ம மரணமும் விடை தெரியாத பல கேள்விகளுடனேயே புதைக்கப்படும் என்பது மட்டும் உறுதி.