செம்மரங்கள் கடத்தல்: திமுக பிரமுகரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை – கிலியில் அரசியல் பிரமுகர்கள்
வேலூர்: அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபுவை வேலூர் தாலுகா போலீசார் காட்பாடி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செம்மரக்கடத்தல் வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்பாளுடன் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள், காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜ முதலியார் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கு கடந்த மாதம் 25-ந் தேதி போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் மற்றும் 73 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து மோகனாம்பாள் தனது அக்காள் நிர்மலாவுடன் கடந்த 9ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் இருவரும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரவணனை தேடும் போலீஸ்
இதற்கிடையே செம்மர கடத்தலில் தொடர்புடைய நிர்மலாவின் மகன் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சரவணன் விரைவில் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்று கூறப்படுகிறது.
திமுக பிரமுகர் கஸ்ட்டி
இந்த நிலையில் கூட்டு சதி செய்ததாக கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபுவை வேலூர் தாலுகா போலீசார் காட்பாடி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கரகாட்டக்காரியுடன் தொடர்பு
இதனையடுத்து தி.மு.க. பிரமுகர் பாபுவை போலீசார் விசாரணை நடத்த அழைத்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டி.எஸ்.பி. மதிவாணன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கரகாட்டக்காரி மோகனாம்பாளுடன் தி.மு.க. பிரமுகர் பாபுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கூட்டுச்சதி செய்தது யார்?
பாபு சில நேரங்களில் செம்மரக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் பாபுவின் நண்பர்கள் 5 பேர் கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
செம்மரக்கடத்தல் பிரமுகர்கள்
கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் ஆடி கந்துவட்டிக்கு கொடுத்து வந்த மோகனாம்பாளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து பாபுவிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? செம்மரங்கள் எங்கிருந்து கடத்தி யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
கிலியில் அரசியல் பிரமுகர்கள்
தி.மு.க. பிரமுகர் பாபுவிடம் விசாரணை நடப்பதால் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய பிரமுகர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் முன்ஜாமின் வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாபுவிடம் 48 மணி நேர விசாரணை முடிவில் அரசியல் பிரமுகர்கள் தொடர்பு மற்றும் கரகாட்டக்காரியின் செம்மரக் கடத்தல் ஆட்டம் பல வெளிவரும் என போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.