கோவை மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி: 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு
கோவை மண்டல அளவிலான குத்துச்சண்டையில் பலர் பங்கேற்றுள்ளனர்.
கோவை: கோவையில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சுமார் 200 வீரர், வீராகணைகள் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.
கோவையில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகின்றன. கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த 20 குழுக்கள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு குழுக்களிலும் 10 பேர் வீதம் பங்கேற்றுள்ள இந்த போட்டியானது, கோவை நீலாம்பூர் பகுதியில் தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
வயது மற்றும் எடை என இரு பிரிவுகளில், ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் என 3 பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில், குறைந்தபட்சம் 12வயதும் அதிகபட்சமாக 21வயது வரையில் உள்ளவர்களும், 30கிலோ எடைக்கும் மேல் உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
ஆண்கள், பெண்கள் என தனியாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிப்பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கும், அடுத்தடுத்து தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறும் தகுதி போட்டியாக நடைபெறுகிறது.
தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என முதல் மூன்று இடங்களை பிடிக்கும் ஆண்கள், பெண்கள் அடுத்தடுத்து தகுதி போட்டிகளில் பங்கேற்பார்கள். ஆண்கள், பெண்கள் ஆர்வமாக பங்கேற்கும் இந்த போட்டியை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.