ரூ. 4.50 கோடி நிலம் மோசடி - சேலம் சார்பதிவாளர் உட்பட 5 பேர் கைது!
சேலம்: சேலத்தில் 4.50 கோடி ரூபாய் மதிப்புடைய நில விற்பனையில் மோசடி செய்த சூரமங்கலம் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் புறநகர் பகுதியான ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பாபு. அவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பொன்கோபால் என்பவர் தன்னுடைய 439 சதுர அடி நிலத்தை 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். இந்த விற்பனை 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடந்துள்ளது.
இந்நிலையில் பொன்கோபால் தான் விற்ற நிலத்தை மோசடியாக அபகரிக்க திட்டமிட்டார். அதன்படி 493 சதுரஅடி நிலத்துக்கு போலியாக பவர் பட்டா தயார் செய்து அதை சேலத்தை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மதன்லால் சாவ்லா வசம் கொடுத்துள்ளார். அதே ஆண்டு ஜூன் 12 இல் இந்த மோசடி நடந்தது.
தொடர்ந்து போலி பவர் பட்டாவை பயன்படுத்தி மதன்லால் சாவ்லா 439 சதுரஅடி நிலத்தை தனது மகன் சஞ்சய்சாவ்லாவின் நிதி நிறுவன பங்குதாரர் சாந்திலால் ரத்தோருக்கு கிரயம் செய்து வைத்தார்.
இதற்கான பத்திரப்பதிவு சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 25 இல் நடந்தது. தனக்கு விற்பனை செய்யப்பட்ட நிலம் மீண்டும் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதை அறிந்த பாபு சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் நடத்திய விசாரணையில் பொன்கோபால் ஏற்கனவே 11 பேரிடம் விற்ற கிட்டத்தட்ட 10 ஆயிரம் சதுரஅடி நிலத்தை மீண்டும் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 4.50 கோடி ரூபாய்.இதற்கு சார்பதிவாளர் பழனியம்மாள் உடந்தையாக இருப்பது தெரிந்தது.
இதையடுத்து போலி ஆவணம் தயார் செய்தல், கூட்டுசதி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பொன்கோபால், மதன்லால் சாவ்லா, அவரது மகன் சஞ்சய்சாவ்லா, பங்குதாரர் சாந்திலால் ரத்தோர், சார்பதிவாளர் பழனியம்மாள் ஆகிய ஐவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே பல்வேறு முறைகேடு காரணமாக சார்பதிவாளர் பழனியம்மாள் மீது துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட பதிவாளர் பரிந்துரை செய்திருப்பது தெரியவந்துள்ளது.