அவ்வளவு தானா எங்க மதிப்பு?: வேதனையில் சுதந்திர போராட்ட தியாகிகள்
தூத்துக்குடி: கடந்த சில ஆண்டுகளாக தியாகிகள் முக்கிய தினங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவதால் அவர்கள் வேதனையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தின விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் முன்னிலை வகித்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் ரவிக்குமார் திறந்த ஜீப்பில் ஏறி போலீசார், ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஏட்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு முதல்வரின் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது நேரடி வாரிசுகள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் இது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மரபுகள் மீறி நடந்து வருவதாகக் கூறி தியாகிகள் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக குடியரசு தின விழாவின்போது கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் தியாகிகளை கவுரவிப்பார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மரபுகள் மீறப்பட்டு போலீசாருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர் கடைசியாகத் தான் தியாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர்.
இதனால் தியாகிகள் பலர் கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறி வருவது வேதனையாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications