முன் பதிவில்லாமல் சிலிண்டர்... "கியூ"வில் நின்று வாங்கிய பாதிக்கப்பட்ட மக்கள்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் முன்பதிவில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கும் சிறப்பு முகாம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
சென்னையில் கடந்தவாரம் பெய்த கனமழையால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சென்னையில் முன்பதிவில்லாமல் கேஸ் சிலிண்டரை வழங்கும் இண்டேன் சிறப்பு முகாமை நேற்றும், இன்றும் என இரண்டு நாட்கள் நடத்தி வருகிறது.
இந்த முகாமில் சென்னையில் எந்த பகுதியைச் சேர்ந்த இன்டேன் வாடிக்கையாளரும் நேரடியாக பணம் செலுத்தி கேஸ் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டது.
சிறப்பு முகாம்கள்...
இந்த சிறப்பு முகாம்கள் சென்னையில் 5 இடங்களில் நடைபெறுகிறது. இன்டேன் வாடிக்கையாளர்கள், தங்களிடம் காலியாக உள்ள எரிவாயு உருளைகளைக் கொடுத்து, வாடிக்கையாளர் எண், விநியோகஸ்தரின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு பணத்தை கொடுத்து கேஸ் சிலிண்டரைப் பெற்று வருகின்றனர்.
பற்றாக்குறை...
வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பல இடங்களில் மின் இணைப்புகள் மீண்டும் கொடுக்கப்பட்ட நிலையில், மக்களின் அடுத்த மிகப்பெரிய பிரச்சினையாக தலை தூக்கியது கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை தான்.
நமக்கு நாமே...
நிவாரண முகாம்களில் இருந்து வீடு திரும்பி வரும் மக்கள் உட்பட பலர் காலியான கேஸ் சிலிண்டர்களைத் தாங்களாகவே தூக்கிச் சென்று வரிசையில் நின்று, இந்த முகாம்களில் புதிய சிலிண்டர்களைப் பெற்றுச் சென்றனர்.
நீண்ட வரிசை...
கூட்டம் அதிகமாக இருந்ததால், பலர் 5 மணி நேரங்களுக்கும் மேலாக வரிசையில் நின்று சிலிண்டர்களைப் பெற்றுச் சென்றனர். இவ்வாறு கால் கடுக்க வரிசையில் நின்றவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் தண்ணீர் பாட்டில் கொடுத்து தாகம் தீர்த்தனர்.
1000க்கும் மேற்பட்டோர்...
லோடு வர வர அவற்றை அதிகாரிகள் மக்களுக்கு டெலிவரி செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராட்டு...
தக்க சமயத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தியது தங்களுக்கு உதவிகரமாக இருந்ததாக இண்டேனைப் பாராட்டிய மக்கள், இன்னும் சிறப்பு முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தால் கூட்டத்தைக் குறைத்திருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இன்றும் இண்டேன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
சுபம் கேஸ் ஏஜென்சி - மணலி புது நகர் - பாரத் ஸ்டேட் பாங்கு எதிரில் - தொடர்பு எண்கள்- 9444465191, 7358181660
ஸ்ரீ செல்லா கேஸ் ஏஜென்சி - தாம்பரம் ( கிழக்கு) - சேலையூர் காவல் நிலையம் எதிரில்- 9884056714, 9884097537
பட்டம்மாள் கேஸ் ஏஜென்சி - தாம்பரம் ( மேற்கு)- முடிச்சூர் கிறிஸ்தவ கோயில், சிவன் கோயில் அருகில்- 9941008205, 9884454397
பிரசன்னா கேஸ் ஏஜென்சி- கொரட்டூர் ( வடக்கு) - ஆர்சிட் ஸ்பிரிங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகில்- 9283103281, 9710190909
ஸ்ரீ அம்பிராம் இன்டேன் - சோழிங்கநல்லூர் - ஆவின் பாலகம் அருகில்- 9094434881, 044-24501333