அய்யாக்கண்ணு போல போராட விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறதா மத்திய அரசு.. ஹரி பரந்தாமன் கொந்தளிப்பு
தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுதச் சொல்வது அவர்கள்மீது மீதான வன்முறை என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.
சென்னை: தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத சொல்வது வன்முறை ஆகும் என ஒய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் ஹரிபரந்தாமன். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஹரி பரந்தாமன் செய்தியாளர்களிடம் பேசும்போது மத்திய அரசை கடுமையாக சாடினார். அவரது பேச்சிலிருந்து:
மாநில உரிமை இது
நீட் தேர்வை தமிழக மக்கள் உரிமைக்கான, மாநில உரிமைக்கான வேட்டு என்றுதான் கருதுகிறோம். 31.1. 2017க்குப் பின்னர் தமிழக சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நீட் வேண்டாம் என்று சட்டம் கொண்டு வந்தனர். அது கொண்டு வரப்பட்டு 100 நாட்களாகி விட்டது. ஆனால் மத்திய அரசு அது பற்றிக் கவலைப்படாமல் உள்ளது.
அடிமை போல கருதுகிறது
இதனால்தான் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இது மாநில உரிமை சம்பந்தமான பிரச்சினை. அடிமை போல தமிழகத்தை மத்திய அரசு நினப்பதாக நான் கருதுகிறேன். கூட்டாட்சி தத்துவம் தூக்கி எறியப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் உள்ளது. நீட் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. இந்தித் திணிப்பு போல நீட்டைத் திணிக்கிறார்கள.
98 சதவீதம் பேர் ஏன் மாற வேண்டும்
நீட் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தில் 98 சதவீதம் பேர் மாநிலத் திட்டத்தின் கீழ் படிக்கிறார்கள். வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படிப்பவர்கள். இரண்டுமே வேறு வேறு பாடத் திட்டங்கள்.
அராஜகம் - வன்முறை
1984 முதல் 2006வரை தமிழ்ப் பாடத்திட்டத்தின் கீழ்தான் நுழைவுத் தேர்வு நடந்து வந்தது. சிபிஎஸ்இ மாணவர்கள் இதில் போட்டி போட முடியில்லை. எனவே 10வது படித்து விட்டு பிளஸ் 1 மாநிலத் திட்டத்துக்கு மாறுவார்கள். ஆனால், 2 சதவீத மாணவர்கள் மாறுவது என்பது வேறு, 98 சதவீத மாணவர்கள் மாறுவது என்பது வேறு. 98 சதவீதம் பேரை மாறச் சொல்வது அராஜகம், வன்முறை.
கூட்டாட்சித் தத்துவம் எங்கே
தமிழக சட்டசபை நிறைவேற்றிய சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் கூட்டாட்சித் தத்துவம் என்பதே கேள்விக்குறியாகி விடும். வாடிவாசல் நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் போல போராடிக் கொண்டே இருக்க முடியாது.
7 கோடி தமிழர்களை அவமதிக்கிறது
நேரு பிரதமராக இருந்திருந்தால், அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை இருந்திருக்காது. தமிழகத்தின் 7 கோடி மக்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது. சட்டத்தை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் திராணி இருந்தால் நிராகரிக்கட்டும். அப்படி செய்யாமல், அய்யாக்கண்ணு போராடியது போல நீ போராடு, நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று சொல்வார்கள்.
துரத்தும் வரை தொடரும்
தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் செயல்பாட்டில் நியாயம் இல்லை. நீட்டைத் துரத்தும் வரை இந்தப் போராட்டம் தொடரத்தான் செய்யும் என்றார் அவர்.